கிளாம்பாக்கம் பேருந்து முனையம் படிப்படியாக மேம்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அனைத்து தேவையான கூடுதல் வசதிகளையும் படிப்படியாக  நிறைவேற்றி தருவோம் என சேகர்பாபு தகவல்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் படிப்படியாக மேம்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் கிளாம்பாக்கத்தில் திறந்து வைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் முழுமையாக மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவிற்கு அனைத்து தேவையான கூடுதல் வசதிகளையும் படிப்படியாக  தறைவேற்றி தருவோம் என்று அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரால், செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் திறந்து வைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை இன்று சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு, இம்முனையத்தில் பயணிகள் சுலபமாக செல்வதற்காக இணைப்புப் பேருந்து மற்றும் இணைப்புப் பாதை அமைப்பது குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கல ஊர்தியில் சக்கர நாற்காலிகள் அமைப்பது குறித்தும், பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

இப்பேருந்து முனையத்தை முழுமையாக மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவிற்கு அனைத்து தேவையான கூடுதல் வசதிகளையும் படிப்படியாக நிறைவேற்றி தருவோம் என கூறினார்.

பிறகு, அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசும்போது, செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். 6வது நாளான இன்று (4.1.2024) கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. தினம்தோறும் 5,000-க்கும் மேற்பட்ட பயணிகள் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தினந்தோறும் துறையினுடைய செயலாளர் சி.சமயமூர்த்தி, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, உள்ளிட்ட பலரும் இப்பேருந்து முனையத்தில் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், பயணிகளிடம் கேட்டறிந்து, தேவைகளை பூர்த்தி செய்கின்ற பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்கள்.

88.56 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட இந்த பேருந்து முனையமானது இந்தியாவிலேயே மிகப்பெரிய பேருந்து முனையம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த பேருந்து முனையம் திட்டமிடப்பட்ட காலத்திற்கும் தற்போது இந்த பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்த காலத்திற்கும் பார்த்தால் போக்குவரத்து அதிகமாக இருப்பதை நாம் கணக்கிட்டு சொல்ல முடியும். அன்றைய காலகட்டத்தில் இதை திட்டமிடுகின்ற பொழுது அடுத்த ஒரு 50 ஆண்டுகளுக்கு தேவையான அளவிற்கு அனைத்து பணிகளையும் நிறைவேற்றி இருக்க வேண்டும்.

ஆனால் 2013-ம் ஆண்டு பேருந்து முனையம் அமைப்பதற்கு முடிவெடுக்கப்பட்ட நிலையில் 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் கோரப்பட்டு 2019-ம் ஆண்டு துவக்கப்பட்டு இருந்தாலும் பணிகள் 30% அளவுக்குத்தான் நிறைவுற்று இருந்தது. மீதமுள்ள பணிகளையும். தேவையான பல்வேறு பயணிகளுக்கு தேவைப்படுகின்ற அடிப்படை கட்டமைப்புகளையும் உருவாக்கி இருந்தோம்.

இப்பேருந்து முளையம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு சிறிய சிறிய பிரச்சனைகள் கவனத்திற்கு வந்தவுடன் அவைகளை முழு வீச்சில் நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட்டதற்கிணங்க, தொடர்ந்து இது போன்ற ஆய்வுக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றோம். அந்தவகையில் நேற்று சர்வீஸ் ரோடு எனப்படுகின்ற அந்த சாலையில் சங்கர வித்யாலயா என்ற பள்ளிக்குச் செல்பவர்கள் எதிர்ப்புறமாக அந்த பள்ளிக்கு செல்வதற்கு பாதையை பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

இந்த பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு வந்தபிறகு அந்த சாலையின் வழியாக பேருந்துகள் வருவதால் இடையூறு இருப்பதாக பெற்றோர்கள் எடுத்துக் கூறியதற்கிணங்க தற்காலிகமாக பள்ளிக்கு பின்புறம் இருக்கின்ற ஒரு வழியை ஏற்படுத்தி தரவும், அதேபோல் பள்ளியினுடைய காலை நேரம் மாலை நேரத்தில் அந்த பாதையில் பேருந்துகளை அனுமதிக்க வேண்டாம் என்றும் தற்போது முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது. அதே போல அருகாமையிலேயே இருக்கின்ற ஆதி திராவிடர் பள்ளியும் இந்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகள் வருவதால் இடையூறு இருப்பதாக கவனத்திற்கு வந்திருக்கிறது.

அதற்கும் மாற்று ஏற்பாடாக பள்ளியை ஒட்டி பின்புற வழியை பயன்படுத்தி அவர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தந்து வருங்காலத்தில் அந்த பள்ளியை வேறு இடத்திற்கு புதிய கட்டுமானத்தை ஏற்படுத்தி பள்ளியினுடைய இடத்தை மாற்றுவதற்கு இன்றைக்கு திட்டமிட்டு இருக்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com