
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன் இனப்பெருக்கக்காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி நகரம் வரை ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பாண்டு வரும் 15 ஆம் தேதி முதல் முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.