
கூடலூர்: காட்டு யானை தாக்கியதில் தபால் பட்டுவாடா செய்யும் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூரை அடுத்த மசினகுடி பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 55). இவர் மசினகுடி தபால் அலுவலகத்தில் தபால் பட்டுவடா செய்யும் பணியாற்றுபவராக இருந்தவர்.
இந்தநிலையில், அவர் வழக்கம்போல நேற்று(ஏப். 21) மாலை பணி முடிந்து கணவருடன் இருசக்கர வாகனத்தில் பொக்காபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றுள்ளார். சாமி கும்பிட்டுவிட்டு திரும்பி வரும் வழியில் திடீரென வனப்பகுதியில் இருந்து யானை ஒன்று சாலைக்கு வந்துள்ளது.
அந்த யானை இருசக்கர வாகனத்தில் வந்த இவர்களை விரட்டியுள்ளது. அப்போது குமார் தனது இருசக்கர வாகனத்தை சாலையில் போட்டுவிட்டு மனைவியையும் இழுத்துக் கொண்டு ஓடியபோது, எதிர்பாராதவிதமாக சாலையில் தடுமாறி கீழே விழுந்த சரஸ்வதியை யானை தாக்கியுள்ளது.
அப்போது அந்த வழியாக ஜீப்பில் வந்தவர்கள் யானையை விரட்டி சரஸ்வதியை மீட்டு, மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனையில் சரஸ்வதி சேர்க்கப்பட்டார்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இரவு சுமார் 9.30 மணியளவில் சரஸ்வதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மசினகுடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.