இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், நோயாளிகள் இல்லை இனி மருத்துவப் பயனாளிகள் என்று அழைக்கப்பட வேண்டும் என மு.க. ஸ்டாலின் கூறினார்.
மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்DPS
Published on
Updated on
1 min read

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், உடல் ஆரோக்கியம் இருந்தால்தான் சாதிக்க முடியும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் நோயாளிகள் இல்லை. இனி மருத்துவப் பயனாளிகள் என்று அழைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவமனையில் இருந்தாலும் மக்கள் பணியாற்றுவதே என் விருப்பமாக உள்ளது. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இதுதான் என்றும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் மக்களுக்கு உயர் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த திட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனையில் இருந்தாலும் மக்கள் நலப் பணியாற்றுவதே என் விருப்பம்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதுமே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், நான் சொன்னேன், என் உடலில் நோய் இருந்தாலும் மக்களை சந்தித்தாலே நோய் சரியாகிவிடும். மக்கள் நலப் பணிகளை செய்தாலே, என் உடல் நலம் சரியாகிவிடும் என்று சொன்னேன்.

கல்வியும் மருத்துவமும் திராவிட அரசின் இரு கண்களாக உள்ளன. கல்விக்காகவும் மருத்துவத்துக்காகவும் தமிழக அரசு எண்ணற்ற திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் நடைபெறவிருக்கிறது. இந்த வகையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 1,256 முகாம்கள் நடைபெறவுள்ளன. இங்கு மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகளின் அறிக்கை ஒரு கோப்பாக போடப்பட்டு, அவரவர் கையில் வழங்கப்பட்டுவிடும். எப்போது எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும் இந்தக் கோப்பை நீங்கள் எடுத்துச் செல்லலாம்.

முகாமுக்கு வருவோரை கனிவோடும் பணிவோடும் மருத்துவப் பணியாளர்கள் நடத்த வேண்டும். ஒருவர் கூட இந்த திட்டத்தில் விடுபடக் கூடாது. எதிலும் எப்போதும் தமிழ்நாடு நம்பர் ஒன், மருத்துவச் சேவையிலும் தமிழகம்தான் நம்பர் ஒன் என்று முதல்வர் கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ், மக்களுக்கு புற்றுநோய் பாதிப்புகளை கண்டறியக் கூடிய உயர்தர மருத்துவப் பரிசோதனை உள்ளிட்டப் பரிசோதனைகள் செய்யப்படும். காலையில் மருத்துவப் பரிசோதனை செய்தால் மாலையில் வாட்ஸ்ஆப் மூலம் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

உயர்தர மருத்துவச் சேவைகள் மக்களுக்கு அவர்கள் வாழும் இடங்களிலேயே கிடைக்க ஏதுவாக இந்த திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com