
தர்மபுரி மாவட்ட பாமக நிர்வாகி கைதைக் கண்டித்து அந்த கட்சியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பென்னாகரம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒகேனக்கல்லில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு தொடக்க விழாவின்போது மேடையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியபோது, பாமக தலைவர் அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து தரக்குறைவாக பேசியது அந்த கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதற்கு மாறாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் குறித்து சமூக வலைதளத்தில் பாமக தருமபுரி மாவட்ட துணை தலைவர் மந்திரி படையாட்சி அவதூறு கருத்து பரப்பியதாக பென்னாகரம் காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுகவினர் புகார் மனு அளித்திருந்தனர்.
அதன்பேரில் பென்னாகரம் போலீஸார் மாவட்ட துணைத் தலைவர் மந்திரி படையாட்சியை கைது செய்தனர். இதனை அறிந்த அந்த கட்சியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பென்னாகரம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். பின்னர் பென்னாகரம் தொகுதி பொறுப்பாளர் சுதா கிருஷ்ணன் தலைமையில் பென்னாகரம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட பாமகவினரை போலீஸார் கைது செய்ய குண்டு கட்டாக தூக்கி, இழுத்துச் சென்றனர். இதனால் பாமகவினர் போலீஸார் இடையே தகராறு ஏற்பட பதட்டமான சூழல் நிலவியது. இதனிடையே பாமகவினர் போலீஸாரிடம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து சாலை மறியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.