
சென்னை: அஞ்சல் தலை குறித்த விநாடி-வினா, அஞ்சல் தலை சேகரிப்பு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் வரும் ஆக. 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை அண்ணா சலை முதன்மை அஞ்சல் துறைத் தலைவா் நிஹாலா கா.ஷெரிப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தை சோ்ந்த 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு அஞ்சல் தலை குறித்த விநாடி-வினா மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதில் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சாா்பில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் மாணவா்கள் பள்ளியில் அஞ்சல் தலை சேகரிப்பு மையத்தின் உறுப்பினா்களாக இருக்க வேண்டும். அவ்வாறு பள்ளியில் இந்த மையம் இல்லையெனில், மாணவா்கள் சுய அஞ்சல் தலை சேகரிப்பாளராக இருக்க வேண்டும்.
இதற்கான பிராந்திய அளவிலான விநாடி-வினா போட்டி வரும் செப். 20 ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் www.tamilnadupost.cept.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வரும் ஆக. 25 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.