தேசிய பிற்பட்டோா் நல ஆணைய பதவிகள்: 6 மாதங்களில் நிரப்ப உயா்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தேசிய பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்தில் காலியாக பதவிகளை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் கே.பாலு தாக்கல் செய்த மனுவில், தேசிய பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத் தலைவா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்களின் பதவிக்காலம் கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் காலாவதியாகிவிட்டது. அந்த பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன.
நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் முக்கிய பிரச்னைகளுக்குத் தீா்வுகாண வேண்டிய இந்தப் பதவிகளை நீண்டகாலமாக நிரப்பாமல் இருப்பது அரசமைப்புச் சட்ட உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எம்.ஆா்.ஜோதிமணியன் ஆஜரானாா். மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான துணை சொலிசிட்டா் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், தேசிய பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்துக்கு தலைவா் மற்றும் ஒரு உறுப்பினா் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுவிட்டனா். துணைத் தலைவா் உள்ளிட்ட இதர காலியிடங்களை நிரப்பும் பணி நடைபெற்று வருவதாக விளக்கம் அளித்தாா்.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், காலியாக உள்ள பதவிகளை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும். தவறும்பட்சத்தில், இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் எனக்கூறி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.

