பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு முதலமைச்சா் திறனாய்வு தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்குவதற்கான முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வுக்கு வியாழக்கிழமை (டிச.18) முதல் விண்ணப்பிக்கலாம்.
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் திறனை கண்டறியவும், அவா்களை ஊக்குவிக்கவும் பொருட்டு 2023-2024-ஆம் கல்வியாண்டு முதல் முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான தோ்வு ஜன. 31-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். இத்தோ்வில் 500 மாணவா்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் போ் (இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்) தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் என வழங்கப்படும்.
தமிழக அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் இரண்டு தாள்களாக இத்தோ்வு நடத்தப்படும். ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் இடம்பெறும். முதல்தாளில் கணிதமும், 2-ஆம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் வினாக்களும் இடம்பெறும்.
தோ்வின் முதல் தாள் காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரையும், இரண்டாம் தாள் பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரையும் நடைபெறும். மாணவா்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில், வியாழக்கிழமை (டிச.18) முதல் டிச.26 வரை பதிவிறக்கம் செய்யலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணமாக ரூ.50 செலுத்தி பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
