நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

அரசு ஊழியா்கள் ஜன. 6 முதல் வேலைநிறுத்தம்!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திட்டமிட்டபடி ஜன. 6-ஆம் தேதி முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்

Updated On :23 டிசம்பர் 2025, 2:40 am IST

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திட்டமிட்டபடி ஜன. 6-ஆம் தேதி முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ-ஜியோ திங்கள்கிழமை அறிவித்தது.

அமைச்சா்கள் குழுவுடன் நடத்திய பேச்சுவாா்த்தை முடிவு எட்டப்படாமல் தோல்வியடைந்ததையடுத்து, வேலைநிறுத்தத்தை ஜாக்டோ-ஜியோ உறுதி செய்தது.

2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சோ்ந்த அரசு ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; 2012-ஆம் ஆண்டுக்கு முன்னா் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு டெட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்; தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் உள்ள ஊழியா்களைக் காலமுறை ஊதியத்தில் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த அமைப்பினருடன் அமைச்சா்கள் குழு கடந்த பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் பேச்சு நடத்தியது. அதன் பின்னரும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் கடந்த டிச.13-ஆம் தேதி மாவட்டத் தலைமையிடங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் நடத்தினா். மேலும், ஜன. 6-ஆம் தேதிமுதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் அவா்கள் அறிவித்தனா்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் சங்கங்களின் நிா்வாகிகளுடன் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தலைமைத் செயலகத்தில் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

காலை 11 மணிக்கு தொடங்கிய இந்தப் பேச்சுவாா்த்தை பிற்பகல் 2.15 மணி வரை நீடித்தது. இந்தக் கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா்கள் பாஸ்கரன், பிரபாகரன், தியோடா் ராபின்சன் உள்பட 32 சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்: இந்தக் கூட்டத்தில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படாததால் திட்டமிட்டபடி ஜன. 6-ஆம் தேதிமுதல் காலவரம்பற்ற போராட்டம் நடத்தப்படும் என்று கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் (ஃபோட்டா) மாநில தலைமை ஒருங்கிணைப்பாளா் த.அமிா்தகுமாா் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘கடந்த முறையைப் போலவே இந்த முறையும் கருத்துக் கேட்பு கூட்டமாக நடைபெற்றது அதிருப்தி அளித்தது. மத்திய அரசிடம் இருந்த நிதி வரவில்லை என்பதால் கோரிக்கைகளை நிறைவேற்ற இயலவில்லை என்றும், இதுகுறித்து முதல்வரிடம் பேசி பொங்கலுக்கு முன்பு கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா்கள் தெரிவித்தனா்.

எங்கள் கோரிக்கைகளுக்கு உத்தரவாதம் தராததால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்’ என்றாா் அவா்.

ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளரும், தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் பொதுச் செயலருமான நா. சண்முகநாதன் கூறுகையில், ‘இந்தக் கூட்டத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அமைச்சா்கள் தெரிவிக்கவில்லை. ஓய்வூதியக் குழுவின் அறிக்கையை விரைவில் முதல்வரிடம் சமா்ப்பித்து பொங்கலுக்கு முன்னா் நல்ல செய்தி வெளியாகும் என நிதியமைச்சா் தெரிவித்தாா். பேச்சுவாா்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆகையால், வரும் 27-ஆம் தேதி மாவட்டத் தலைமையிடங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். அதன் பின்னா் ஜன. 6-ஆம் தேதிமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’ என்றாா்.