கல்லூரி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், அமைச்சுப் பணியாளா்களுக்கு இட மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருப்பம் உள்ளவா்கள் புதன்கிழமை (டிச.24) முதல் விண்ணப்பிக்கலாம் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உயா்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் நலன் கருதி நிகழ் கல்வியாண்டுக்கான பணியிட மாறுதலுக்கு பொது கலந்தாய்வு நடத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், நூலகா்கள், உடற்கல்வி இயக்குநா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு டிச.24 முதல் ஜன.5 வரை இணையவழியில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளா்கள் www.dcetransfer.in, www.nonteaching.dcetransfer.in என்ற இணையதள முகவரியிலும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளா்கள் www.tndotetransfer.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா் அமைச்சா் கோவி.செழியன்.
