/

கோவையிலுள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

கோவை தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றி...

News image

கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள புனித சின்னப்பர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை

Updated On :25 டிசம்பர் 2025, 11:55 am IST

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை எடுத்த கூறும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் தத்ரூபமாக மாட்டு தொழுவம் அமைக்கப்பட்ட குழந்தை இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்து பிறப்பை எடுத்துக்கூறும் விதமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் இயேசு கிறிஸ்து அவதரித்த மாட்டுத் தொழுவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு நள்ளிரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினஸ் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் குழந்தை இயேசு உருவ பொம்மையை பக்தர்களுக்கு உயர்த்திக் காட்டி இயேசு பிறப்பை அறிவித்தார். பின்னர் அந்த உருவ பொம்மை குடிலில் வைக்கப்பட்டு ஆராதனைகள் மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டதாக ஆயர் தாமஸ் ஆக்வினஸ் தெரிவித்தார்.

புனித சின்னப்பர் தேவாலயத்தில் மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் வழிபாடு நிகழ்ச்சி.

புனித சின்னப்பர் தேவாலயத்தில் மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் வழிபாடு நிகழ்ச்சி.

அதேபோல கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள புனித சின்னப்பர் தேவாலயத்தில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் நள்ளிரவு மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள புனித சின்னப்பன் தேவாலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனை நடைபெற்றது அப்போது பல் சமய நல்லுறவு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக சர்வ மத பிரார்த்தனையும் நடத்தப்பட்டது. அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது ரபிக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமிய மற்றும் சீக்கிய மதங்களைச் சார்ந்த குருமார்கள் பங்கேற்று கிறிஸ்தவ மக்களுக்கு புத்தாடைகளை வழங்கியும் இனிப்புகளை வழங்கியும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதேபோல் ரோஜா பூக்களை கிறிஸ்தவ பாதிரியாருக்கு கொடுத்தும் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். அப்போது பேசிய முகம்மது ரஃபீக் எங்கும் இல்லாத வகையில் கோவையில்தான் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்தன்று நள்ளிரவு பிரார்த்தனை மத நல்லிணக்க பிரார்த்தனையாக நடத்தப்படுவதாகவும் இந்த பிரார்த்தனையில் சாதி மத வேறுபாடு இன்றி இந்து மத துறவி கிறிஸ்தவ மத ஆயர் இஸ்லாமிய மத ஹாஜி மற்றும் சீக்கிய மத குரு என சர்வ மதத்தை சார்ந்தவர்களும் பங்கேற்று உலக அமைதிக்காகவும் மத நல்லிணக்கத்திற்காகவும் பிரார்த்தனையில் ஈடுபடுவதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

Summary

Christmas celebrations in Coimbatore churches are in full swing

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.