/

தொழில்நுட்பங்களில் தமிழர்கள்! பண்ருட்டி அகழாய்வில் சங்கினாலான பொருள் கண்டெடுப்பு!

தமிழர்கள் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கான மற்றுமொரு சான்று கிடைத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.

News image

பண்ருட்டி மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள சங்கினாலான பொருள்.

Updated On :15 பிப்ரவரி 2025, 5:59 pm IST

தமிழர்கள் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கான மற்றுமொரு சான்று கிடைத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் 360 செ.மீ. ஆழத்தில், 7 செ.மீ. நீளம் கொண்ட சங்கினாலான பொருள் ஒன்று பாதி நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"விலங்கு அரம் பொருத சங்கின் வெள் வளை - 2441

பண்டைக் காலத்தில் அரம் போன்ற சிறு கருவிகளைக் கொண்டு சங்கினை அறுத்து அணிகலன்கள் செய்ததைக் குறிப்பிடுகிறது சீவக சிந்தாமணி பாடல்.

இதற்குச் சான்றாக கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் 360 செ.மீ. ஆழத்தில், 7 செ.மீ. நீளம் கொண்ட சங்கினாலான பொருள் ஒன்று பாதி நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சங்கு வளையல்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது போக மீதமுள்ள ஒரு பகுதியாகும்.

இதுவரை இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் இரும்புப் பொருள்கள், ராசராச சோழன் காலத்துச் செப்புக் காசுகள், அஞ்சனக் கோல், அகேட், சூதுபவளம், கண்ணாடி மணிகள், ரௌலட்டட் பானை ஓடுகள் கிடைத்துள்ள நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் இந்த பகுதியில் சங்கறுக்கும் தொழில் நடைபெற்றுள்ளதையும் இப்பகுதி மக்கள் அந்த தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியுள்ளதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

தமிழர்கள் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கான மேலுமொரு சான்று கிடைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.