தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

2026 தேர்தலில் தவெக வரலாறு படைக்கும்! - விஜய்

நாங்கள் மாற்றத்தை உருவாக்கப் போகிறோம் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

News image

தவெக தலைவர் விஜய்

கோப்புப் படம்

Updated On :26 பிப்ரவரி 2025, 7:04 am

DIN

2026 தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் வரலாறு படைக்கும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும் அரசியல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர், தவெக பொதுச் செயலர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரசாந்த் கிஷோருக்கு ஆங்கிலத்தில் வாழ்த்து தெரிவித்த விஜய் விழாவிற்கு வந்திருந்த அனைவரும் தனது பாணியில் வணக்கம் தெரிவித்து உரையைத் தொடங்கினார்.

இந்த நிகழ்வில் விஜய் பேசுகையில், “2026 தேர்தலில் தவெக வரலாறு படைக்கும். 1967, 1977 ஆம் ஆண்டு தேர்தலைப் போல நாங்கள் மாற்றத்தை உருவாக்கப் போகிறோம்.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது ஜனநாயக உரிமை. மக்களுக்குப் ரெம்பவும் பிடித்துப்போன ஒருவன் அரசியலுக்கு வந்தால் நல்லவர்கள் எல்லாம் வரவேற்பார்கள். ஆனால், அதிகாரத்தில் இருக்கும் ஒரு சிலருக்கு எரிச்சல் இருக்கத்தான் செய்யும்.

இதுவரைக்கும் நாம் சொன்ன பொய்யெல்லாம் கேட்டுக் கொண்டு ஓட்டுப் போட்டுக்கொண்டிருந்த மக்கள் இப்போ இவன்(விஜய்) பக்கம் நெருக்கமாக இருக்கிறார்களே. இவனை எப்படி காலி செய்யலாம் என சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர் சிலர்.

அரசியல் என்றாலே வித்தியாசமானதுதான். யார் யாரை எதிர்ப்பார்கள் என்று தெரியாது. ஒருவர் கட்சி ஆரம்பித்தால் எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். பயமில்லாமல், பதற்றமில்லாமல் எதிர்ப்புகளை இடது கையில் கையாண்டு கொண்டு இருக்கிறோம்.

நம்முடைய தமிழக வெற்றிக் கழகம் முதலாவது ஆண்டைக் கடந்து தற்போது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அரசியல் கட்சிக்கு அடிப்படை தான் பலமே.

நம்மளுடைய கட்சி ஒன்றும் பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது. இது எளிய மக்களுக்கான கட்சி. நாட்டின் வளர்ச்சியைப் பற்றியோ.. மக்களின் வளர்ச்சியைப் பற்றியோ இந்தப் பண்ணையார்களுக்கு அக்கறையே கிடையாது. அவர்களுக்கான முழுப் பிரச்னை பணம் மட்டும்தான்.

நமது கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் இளைஞர்களாகவே இருக்கின்றனர் என அனைவரும் கூறுகின்றனர். ஏன்... இருந்தால் என்ன? அறிஞர் அண்ணா கட்சி தொடங்கும் போது அவருக்குப் பின்னால் இருந்தவர்களும் இளைஞர்கள்தான். எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது போது அவருக்குப் பின்னால் இருந்தவர்களும் இளைஞர்கள்தான். விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப் போகிறோம். தமிழக வெற்றிக் கழகம் முதன்மை சக்தி என அனைவருக்கும் காட்டுவோம்.

இவர்கள் தற்போது புதிய பிரச்னை ஒன்றை கிளப்பி விட்டிருக்கிறார்கள். மும்மொழிக் கொள்கை.. இந்தத் திட்டத்தை இங்கே செயல்படுத்தவில்லை என்றால் நிதி தர மாட்டேன் எனக் கூறுகின்றனர். கொடுக்க வேண்டியது மத்திய அரசின் வேலை. கேட்க வேண்டியது மாநில அரசின் கடமை.

ஃபாசிசமும் பாயாசமும் இணைந்து எல்கேஜி குழந்தைகள் போல சண்டையிட்டுக் கொள்கின்றனர். ஒருவர் நமக்கு அரசியல் எதிரி இன்னொருவர் கொள்கை எதிரி. நாட்டில் இவ்வளவு பிரச்னைகள் இருக்கும்போது இருவரும் அடித்துக்கொள்வது போல ஹேஷ்டேக் போட்டு விளையாடி கொண்டிருக்கின்றனர்.

சுய மரியாதைக்கான ஊர் நமது ஊர். அனைத்து மொழிகளையும் மதிப்போம். எந்த மொழி வேண்டுமோ தனிப்பட்ட முறையில் கற்றுக்கொள்வோம். வேறு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால் எப்படி புரோ? மனித உரிமைக்கு எதிராக செயல்பட்டால் இட்ஸ் வெரி ராங்க் புரோ. இந்தப் பொய் பிரசாரங்களைப் புறந்தள்ளிவிட்டு நாங்களும் உறுதியாக ஏற்போம். நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம்” என தனது உரையை முடித்தார் விஜய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.