
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெறும் தலைவர் அல்ல, தமிழகத்தின் நம்பிக்கை என்று அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவுபெற்றுள்ளது. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த விழாவில் தவெக தலைவர் விஜய்யுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் பேசிய பிரசாந்த் கிஷோர் வணக்கம் என்று தமிழில் சொல்லி தனது உரையைத் தொடங்கினார்.
பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:
”தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் காரணமாக இருக்க முடியாது. உங்களின் வெற்றிக்கு நீங்கள் செய்யும் பணியே காரணம். உங்கள் தலைவரும் தொண்டர்களும் செய்யும் பணிகளால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
பிறகு நான் ஏன் வந்திருக்கிறேன் எனக் கேட்கலாம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் வியூகப் பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டேன்.
2021 தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்குவங்கத்துக்கான வேலை செய்த பிறகு நான் ஓய்வுபெற்றுவிட்டேன். இங்கு தவெகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக நான் வரவில்லை. அவர்களுக்கு என் வியூகமும் தேவையில்லை. நான் எனது சகோதரர், நண்பருமான விஜய்க்கு ஆலோசனை கூறவரவில்லை. அவருக்கு அது தேவையும் இல்லை.
என்னைப் பொறுத்தவரை விஜய் ஒரு அரசியல் தலைவர் அல்ல, அவர் தமிழகத்தின் புதிய நம்பிக்கையாக இருக்கிறார். அதனால்தான் நான் இங்கு வந்துள்ளேன். தவெக அரசியல் கட்சி அல்ல, இது லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம்.
35 ஆண்டுகால அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளார் விஜய், அதனால்தான் நான் இங்கு வந்துள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வந்துள்ளேன். எனக்கு தமிழ் பேச வராது, ஆனால் புரிந்துகொள்ள முடியும்.
அடுத்தாண்டு தவெக வென்றால், நான் மீண்டும் இங்கு வந்து தமிழில் நன்றி கூறி உரையாற்றுவேன். தமிழகத்தில் நடைபெறும் அரசியல் ஊழல் வேறெங்கும் கண்டதில்லை. இதனை சரிசெய்ய வேண்டும்.
தமிழகத்தில் தோனி மிகவும் பிரபலமானவர். அடுத்தாண்டு எனது பங்களிப்புடன் தவெக வெற்றி பெற்றால், அவரைவிட நான் பிரபலமாவேன்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.