புதிய தமிழகம் பேரணிக்கு அனுமதி மறுத்தது ஏன்? என விளக்கம் அளிக்கக் கோரி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி பேரணி நடத்த புதிய தமிழகம் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அருந்ததி சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட 3% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பேரணி நடத்த புதிய தமிழகம் கட்சி திட்டமிட்டிருந்தது. இதற்கு காவல் துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
பேரணிக்காக தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இதனால் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் முடிவில், பேரணிக்கு அனுமதி அளிப்பதோ, மறுப்பதோ வேறு விஷயம். ஆனால் அதனை கடைசி நேரத்தில் கூறுவது ஏன்? குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே கூற வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.
கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து உத்தரவிட்டால் என்ன அர்த்தம்? காவல் துறை அரசியல் ஏஜென்சி அல்ல; மனு தொடர்பாக காவல் துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜன. 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆளும் கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா? காவல் ஆணையருக்கு எதிராக பாஜக வழக்கு!