போட்டித் தொடங்குவதற்கு முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
போட்டித் தொடங்குவதற்கு முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது!

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டித் தொடங்கியது..
Published on

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.

தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பொங்கல் திருநாளைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கல் திருநாளான புதன்கிழமையில் (ஜன. 15) பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

அதன்படி, நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்ட நிலையில், பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது.

போட்டித் தொடங்குவதற்கு முன்னதாக வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். காலை 7.40 மணியளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

பொது மகாலிங்கம் மடத்து சாமி கோயில் காளை அலங்கரித்து அழைத்து வரப்பட்டது. பின்னர், முதல் காளையாக அவிழ்த்து விடப்பட்டதைத்தொடர்ந்து மற்ற கோயில் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன.

போட்டிகள் 10 சுற்றுகளாக நடத்தப்படவுள்ளன. மேலும், ஒரு சுற்றுக்கு 50-70 வீரர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.

காயமடைந்த வீரர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை மேற்கொள்வதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட மருத்துவக்குழுக்களும், தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்கு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் அவசர ஊர்திகள் தயார்நிலையில் உள்ளன.

காயம்படும் காளைகளை மீட்டு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு கால்நடை மருத்துவக்குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று அவற்றின் மேல்சிகிச்சைக்காக கால்நடை அவசர ஊர்திகளும் மதுரை மாநகராட்சி மற்றும் கால்நடைத்துறை சார்பாக தயார்நிலையில் உள்ளன.

இந்தப் போட்டியில் முதல் பரிசாக சிறந்த காளைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கும் டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் காரும் வழங்கப்படவுள்ளது. இரண்டாவது பரிசாக காளைக்கு நாட்டினப் பசு மற்றும் கன்று, வீரருக்கு பைக் வழங்கப்பட உள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,000 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் களமிறங்குகின்றனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக சுமார் 2,400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com