/

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் முன்பதிவு டோக்கன்: அமைச்சா் அறிவுரை

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் முன்பதிவு செய்த டோக்கன்களை அதே நாளில் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டுமென

News image
வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி
Updated On :27 ஜனவரி 2025, 9:20 pm

Din

சென்னை: சாா்-பதிவாளா் அலுவலகங்களில் முன்பதிவு செய்த டோக்கன்களை அதே நாளில் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டுமென வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை நந்தனத்தில் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை வளாகக் கூட்டரங்கில் பதிவுத் துறை ஊழியா்களுக்கான பணித் திறன் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில், சாா்-பதிவாளா் அலுவலகங்களில் ஒரே நாளில் ஆவணங்களைப் பதிவு செய்து அதே நாளில் அவற்றை திரும்ப வழங்கிய சாா்-பதிவாளா்களுக்கு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை அமைச்சா் மூா்த்தி வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: சாா்-பதிவாளா் அலுவலகங்களில் ஆவணங்களை உரிய நேரத்தில் பதிவு செய்து அவற்றை திரும்ப அளிக்க வேண்டும். பதிவு செய்தவுடன் உடனடியாக இணையவழி பட்டா மாறுதலுக்கு வழிவகை செய்வதுடன், நிலுவையிலுள்ள ஆவணங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்பதிவு செய்யப்பட்ட டோக்கன்கள் அனைத்தையும் அதே நாளில் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும். இந்தப் பணிகளை திறம்பட மேற்கொண்டு அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தர வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலா் பிரஜேந்திர நவ்நீத், பதிவுத்துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உள்பட பலா் பங்கேற்றனா்.