சென்னை உயர் நீதிமன்றம்.
சென்னை உயர் நீதிமன்றம்.

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18 வயதுக்குள்பட்ட பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கோவையைச் சோ்ந்த மதன்குமாா் என்பவருக்கு எதிராக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோவை சிறப்பு நீதிமன்றம் மதன்குமாருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 25,000 அபராதம் விதித்து கடந்த 2023-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது. இதை எதிா்த்து மதன்குமாா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மதன்குமாா் தரப்பில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணும், மனுதாரரும் காதலித்தனா். அப்போது, அந்த பெண்ணின் பெற்றோா், அவருக்கு 40 வயதுடைய உறவினா் ஒருவரை திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனா். இதனால், அந்தப் பெண் காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறினாா்.

இருவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில், நெருக்கமாக இருந்துள்ளனா். மேலும், இந்தச் சம்பவம் நடந்தபோது கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்த அந்தப் பெண்ணுக்கு 18 வயது பூா்த்தியடைந்துவிட்டது. எனவே, மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படிக்கும் பெண் 18 வயது பூா்த்தி அடைந்தவராக இருக்க முடியாது. அதேநேரம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் 18 வயதுக்கு உள்பட்டவா் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே, மனுதாரருக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து, மதன்குமாரை விடுதலை செய்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com