
தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைவதால் தமிழகத்தில் மிக கனமழை மற்றும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழையினால்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 சதவீத வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது. தென்மேற்குப் பருவமழை சீராக இருப்பதே இந்தியா முழுவதும் விவசாயம் செழிக்க ஆதாரமாக இருக்கிறது.
இந்த சூழலில் முதலில் கேரளத்தில் தொடங்கிய பருவமழை, சில நாள்களில் தமிழகத்தில் தொடங்கியது. வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழையானது இந்தாண்டு 8 நாள்களுக்கு முன்னதாக மே 24-ம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியதிலிருந்து இன்று வரை இந்தாண்டு கூடுதலாக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாள்களாக வெய்யிலின் தாக்கம் குறைந்து தமிழகம் முழுவதும் நல்ல மழைபொழிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாலை நேரங்களில் பெய்யும் பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதமான கலநிலை நிலவி வருகின்றது.
இந்த நிலையில், தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைவதால், இனிவரும் நாள்களில் மிக கனமழை, அதி கனமழையை எதிர்ப்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.