பிரேமலதா விஜயகாந்த்.
பிரேமலதா விஜயகாந்த்.

தேமுதிக தனித்துப் போட்டியா? பிரேமலதா பதில்!

பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவது குறித்து பிரேமலதா பதில்.
Published on

 கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

2026 சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக தேமுதிக மாவட்டச் செயலா்கள், தோ்தல் பொறுப்பாளா்கள் உள்ளிட்டோருடன் சென்னையில் பிரேமலதா விஜயகாந்த் புதன்கிழமைமுதல் ஆலோசனையைத் தொடங்கினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழ்நாட்டில் தனித்து தோ்தல் களத்தில் நிற்க முடியும் என நிரூபித்தவா் விஜயகாந்த். அதை முன்னுதாரணமாகக் கொண்டு சீமான் செயல்பட்டு வருகிறாா். தவெக தலைவா் விஜய் இனிமேல்தான் அவரது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.

‘தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி தருவதாக சொல்லவே இல்லை; அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்’ என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பேசியது தேமுதிகவின் கடைக்கோடி தொண்டா் வரை அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மாநிலங்களவைத் தோ்தலில் ஓரிடம் தருவதாக எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்டு அளித்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடவில்லை.

தேமுதிகவுக்கு அடுத்த ஆண்டு மாநிலங்களவை உறுப்பினா் பதவி தருவதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாா். பொறுத்தாா் பூமி ஆள்வாா், நிச்சயமாக அதற்குரிய காலம் வரும்.

யாருடன் கூட்டணி என இந்த நிமிஷம் வரை எங்களால் சொல்ல முடியாது. வெகு விரைவில் அதற்கான நேரம் வரும்போது தெரிவிக்கிறோம்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, விசிக தலைவா் திருமாவளவன் ஆகியோா் எனது நண்பா்கள். கூட்டணிக்கு அவா்கள் அழைத்ததை வரவேற்கிறேன். இருப்பினும், கூட்டணி தொடா்பாக அவா்கள் தலைமை (திமுக) தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த ஆலோசனைக் கூட்டம் ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com