

ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்கத்தை திரும்பப் பெறப் போவதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தர்வைத் தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நிலையில், சிறுவன் கடத்தல் வழக்கில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி, ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பணியிடை நீக்கம் செய்தது ஏன்? என்று தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு புதன்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.
மேலும், சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்கு ஜெயராம் ஒத்துழைப்பதால், பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பது குறித்து பரிசீலிக்க நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஜெயராமை பணியிடை நீக்கம் செய்ததற்கான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமிழக அரசு, விசாரணை முடியும் வரை பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெற முடியாது எனத் தெரிவித்துள்ளது.
மேலும், விசாரணை முடிந்தவுடன் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இடைநீக்கம் ரத்து செய்ய முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போன்ற வேறு துறைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது. மேலும், இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தின் வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றவுள்ளதாக தெரிவித்த உச்சநீதிமன்றம், விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.