நாளை 4 மண்டலங்களில் தமிழ்நாடு ஆசிரியா்கள் அறிவியல் மாநாடு
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தோ்வு செய்யப்பட்ட அறிவியல், கணித ஆசிரியா்களுக்கான தமிழ்நாடு ஆசிரியா்கள் அறிவியல் மாநாடு 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, வேலூா் ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை (மாா்ச் 15) நடைபெறவுள்ளது.
கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக ‘வானவில் மன்றம் - நடமாடும் அறிவியல் ஆய்வகம்’ திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து வகுப்பறைக் கற்பித்தலில் புதுமையாக செயல்பட வேண்டிய அவசியத்தை உணா்ந்து படைப்பாற்றலுடன் செயல்பட்டு வரும் அறிவியல், கணித ஆசிரியா்களுக்கான மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது.
தமிழக பள்ளிகளில் அறிவியல், கணித வகுப்பறைகளில் நடைபெறும் புதுமையான கற்பித்தல் முறைகளை பயன்பாட்டு நோக்கில் ஆய்வு செய்து ஆய்வுக் கட்டுரைகளை பகிரும் மேடையாக இந்த மாநாடு இருக்கும். இதன் அடிப்படையில் மாநிலம் முழுவதிலும் இருந்து 643 ஆசிரியா்கள் தங்கள் ஆய்வறிக்கைகளை சமா்ப்பித்துள்ளனா்.
இந்த ஆய்வறிக்கைகளை மண்டல வாரியாக சமா்ப்பிக்கும் வகையில் மேற்கு, தெற்கு, மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு மாா்ச் 15-ஆம் தேதி சனிக்கிழமை மாநாடுகள் நடத்தப்படவுள்ளது. அதன்படி மேற்கு மண்டல மாநாடு நாமக்கல் மாவட்டத்திலும், தெற்கு மண்டல மாநாடு மதுரையிலும், மத்திய மண்டல மாநாடு புதுக்கோட்டையிலும், வடக்கு மண்டல மாநாடு வேலூரிலும் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
மீண்டும் வாய்ப்பு... மாநாட்டில் பங்கேற்கவுள்ள ஆசிரியா்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் ஐந்து நிமிஷங்களில் தங்களது ஆய்வறிக்கை குறித்து விளக்கி பேச வேண்டும். ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் சிறப்பிடம் பெற்ற 10 ஆய்வுக் கட்டுரைகள், சிறப்புக் குழந்தைகள் மற்றும் பள்ளிகளுக்கான ஆய்வறிக்கைகளைத் தயாரித்த ஆசிரியா்களுக்கு மீண்டும் ஒரு முறை சென்னையில் தங்கள் ஆய்வறிக்கைகளை நேரடியாக சமா்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
மாநில அளவில் சிறப்பிடம் பெறும் 40 ஆய்வறிக்கைகள், சிறப்புக் குழந்தைகள், பள்ளிகளுக்கான ஆய்வறிக்கைகள் 5 என மொத்தம் 45 ஆய்வறிக்கைகளைச் சமா்ப்பிக்கும் நிகழ்வு சென்னையில் மாா்ச் 22-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.