

சென்னை: சென்னை ஆலந்தூர் அருகே மெட்ரோ தூணில் இருசக்கர வாகனம் மோதியதில் இரண்டு கல்லூரி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பலியாகினர்.
இருவரும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை கண்டுவிட்டு, வீடு திரும்பிய நிலையில் விபத்தில் சிக்கியுள்ளனர்.
சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கால்வின் கென்னி, சித்தார்த்தன் ஆகியோர் நேற்று இரவு ஐபிஎல் போட்டியை கண்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர்.
இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிய நிலையில், ஆலந்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மெட்ரோ தூணில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், தலையில் பலத்த காயமடைந்த இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவுக் காவல்துறையினர் இளைஞர்களின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், வழக்குப் பதிவு செய்து இளைஞர்கள் மதுபோதையில் வாகனம் ஓட்டினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.