
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பே, மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான், தற்போது வரவிருக்கும் நாள்கள் எப்படியிருக்கும் என்பது பற்றி தெரிவித்துள்ளார்.
மே 4ஆம் தேதி கத்திரி வெய்யில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது.வேலூரில் ஞாயிற்றுக்கிழமை 105.62 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நிகழாண்டில் இதுவரை பதிவான வெப்ப அளவுகளில் இதுவே அதிகமாகும் என சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அடுத்து வரும் கத்திரி வெய்யில் நாள்கள் பற்றி தமிழ்நாடு வெதர்மேன் எனப்படும் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் எப்படி தொடங்கியது கத்திரி வெய்யில்? பரவலாக பலத்த மழையுடன். கடந்த இரண்டு நாள்களாக இருந்த வெப்பத்தை இந்த மழை வெகுவாகக் குறைத்துவிட்டது. இந்த அக்னி நட்சத்திரக் காலம் இவ்வாறுதான் இருக்கப் போகிறது. ஒரு சில நாள்கள் கடுமையான வெப்ப நாள்காகவும், அடுத்து ஒரு சில நாளில் மழை பெய்து, வெப்ப அளவு குறைந்துவிடும். இப்படித்தான் அடுத்து வரும் நாள்கள் இருக்கப் போகின்றன.
நேற்றைய வெப்ப அளவைக் காட்டிலும் இன்று வெய்யில் குறைந்துள்ளது. தமிழகத்தில் வெப்ப அளவில் வழக்கம் போல வேலூர் மாவட்டம் முதலிடம் பிடிக்கிறது என்று தெரிவித்து மழை நிலவரம் குறித்த தரவுகளையும் இணைத்துள்ளார்.
இந்தப் பதிவுக்கு அடுத்து எப்போது மழை வரும் என்று சிலரும், நெல்லையைச் சேர்ந்தவர்கள், சூரியன் பக்கத்தில் நெல்லை குடிபெயர்ந்து போனது போல இருக்கிறது என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.
ஆனால், மக்களே சற்றும் எதிர்பாராத வகையில் நேற்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்திருந்தது. தென்னிந்திய கடலோரப் பகுதியின் மேல், வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதால் ஏற்படும் காற்று குவிதல் காரணமாக மழை பெய்தது. இது மே 10 வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.