நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

நெல் கொள்முதல் குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
M.K. Stalin
முதல்வர் மு.க. ஸ்டாலின்கோப்புப்படம்
Published on
Updated on
3 min read

விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு குறுவை பருவத்தில் அதிக நெல் உற்பத்தி மற்றும் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதையடுத்து விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிடவும், செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளின் மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று (17.11.2025) கடிதம் எழுதியுள்ளார்.

சாதனை படைத்த குறுவை பருவ நெல் உற்பத்தி

தமிழ்நாட்டில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டு கரீஃப் (குறுவை) பருவத்தில் மிக அதிக அளவு நெல் உற்பத்தி எய்தப்பட்டுள்ளது. 16.11.2025 நிலவரப்படி நெல் கொள்முதல் கடந்த 2024-2025-ஆம் ஆண்டினுடைய 4.81 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து நடப்பாண்டில் 14.11 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது என்றும் இது தமிழ்நாட்டின் வரலாற்றில் குறுவை (கரீஃப்) பருவத்தில் நெல் கொள்முதலில் புதிய சாதனையாகும் என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 16.11.2025 நிலவரப்படி 1,932 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, 1,86,674 விவசாயிகளிடமிருந்து 14.11 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை ரூ. 3,559 கோடி வழங்கி கொள்முதல் செய்துள்ளது. ஒப்பீட்டளவில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (16.11.2024 வரை) 1,095 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 4.83 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.

தற்போதைய நெல் கொள்முதல் பருவத்தில் (31.08.2026 வரை) விற்பனைக்குரிய சந்தை உபரி நெல் 98.25 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அரிசி அடிப்படையில் இது 66.81 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். இது தொடர்பாக, 8.8.2025 அன்று, Kharif Marketing Season (KMS) 2025-2026-க்கான அரிசி கொள்முதல் இலக்காக 20 லட்சம் மெட்ரிக் டன்னாக நிர்ணயிக்குமாறு மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு முன்மொழிவு பரிந்துரைக்கப்பட்டது. 

தற்போது மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை, KMS 2025-2026-க்கான அரிசி கொள்முதல் இலக்காக 31.3.2026 வரை 16 லட்சம் மெட்ரிக் டன்னாக நிர்ணயித்துள்ளது. நெல் சாகுபடியில் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றில் சாதனை அளவிலான அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, KMS 2025-2026-க்கான 16 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இலக்கை, கரீஃப் பருவத்தின் கடைசியில் கொள்முதல் செய்யப்படும் மொத்த நெல் அளவிற்கேற்ப உயர்த்தி திருத்தம் செய்திட தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

இரண்டாவதாக, காவிரி டெல்டா பகுதி மற்றும் பிற மாவட்டங்களில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையைக் கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் அளவை
17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக நிர்ணயிக்குமாறு தமிழ்நாடு அரசால் 19.10.2025 அன்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

மூன்று குழுக்கள் 25.10.2025 முதல் 28.10.2025 வரை தமிழ்நாட்டில் களப் பயணம் மேற்கொண்டு விவசாயிகளிடமிருந்து நெல் மாதிரிகளை சேகரித்தன. ஆனால் தளர்வு தொடர்பான உத்தரவுகள் இன்றளவும் கிடைக்கவில்லை.

கரீஃப் (குறுவை) பருவ கொள்முதல் இன்றளவும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 16.11.2025 முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது கொள்முதல் செய்யப்படும் நெல்லில் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் வகையில் ஈரப்பத அளவு தளர்வு உத்தரவினை விரைவாக வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர், பிரதமரிடம் இக்கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். 

செறிவூட்டப்பட்ட அரிசி மாதிரிகள் எடுப்பதில் தளர்வு ஆணைகள் கோரி

மாநில அரசு, 07.10.2025 அன்று 5 ஒப்பந்ததாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்க உத்தரவு வழங்கியது என்றும் 16.11.2025 நிலவரப்படி ஒப்பந்ததாரர்கள் 1,760 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து, FoRTrace இணையதளத்தில் 123 மாதிரிகளைப் பதிவேற்றியுள்ளனர் என்றும், இதில் பதிவேற்றப்பட்ட 77 மாதிரிகளில், இதுவரை 33 மாதிரிகளுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும், ஒரு மாதிரி முடிவை அறிவிக்க கிட்டத்தட்ட 12 நாட்கள் ஆகின்றன என்பதை குறிப்பிட்டு, இந்தமுறை காலதாமதத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். 

தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்து பெறப்படும் கண்டுமுதல் அரிசியை நகர்வு செய்திடவும், அதனைத் தொடர்ந்து வரவிருக்கும் சம்பா (ரபி) பருவ நெல் கொள்முதலுக்குத் தேவையான இடத்தினை ஏற்படுத்திடவும் அதிக அளவு செறிவூட்டப்பட்ட அரிசி அரவைக்குத் தேவைப்படுகின்றன.

எனவே, தற்போதுள்ள 25 கிலோ FRK சிப்பமிடும் அளவை 50 கிலோவாக அதிகரிக்க வேண்டும் என்றும், மாதிரி தொகுதி அளவை 10 MT-இலிருந்து 25 MT ஆக BIS தரநிலைகளுக்கு (ஒரு தொகுதிக்கு 500 மூட்டைகள்) ஏற்ப அதிகரிக்க வேண்டும் என்றும், மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலம் எடுக்கப்பட வேண்டிய மாதிரிகளின் எண்ணிக்கை குறைந்து, இடப்பற்றாக்குறை நீங்கி, முடிவுகளை அறிவிக்கும் காலம் 12 நாட்களிலிருந்து 7 நாட்களாகக் குறையும் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இது தொடர்ச்சியான நெல் அரவைக்கு வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும்,  செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளின் மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு வழங்கி, தென்னிந்திய மாநிலங்களில் உள்ள ஆய்வகங்களில் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

இப்பரிந்துரைகளை பரிசீலனை செய்து நெல் அரவை ஆலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் விநியோகத்தினை எளிதாக்கத் தேவையான உத்தரவுகளை பிறப்பித்திட வேண்டுமென்றும், இதன்மூலம் சோதனை முடிவுகளைப் பெறுவதற்கான காலம் கணிசமாகக் குறையும் என்றும், தமிழ்நாடு விவசாயிகளின் நலன் கருதி இவ்விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவுகளை எடுத்திட,  முதலமைச்சர், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Summary

MK stalin Letter to PM modi to Increase in Paddy Production and Procurment Price

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com