

கோவை: கோவையில் அதிமுகவின் முன்னாள் மாவட்டக் கவுன்சிலரின் மனைவி புதன்கிழமை காலை கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையைச் செய்ததாக காவல் நிலையத்தில் சரணடைந்த முன்னாள் கவுன்சிலரின் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
கோவை, பன்னீர்மடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக கட்சியின் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கவிசரவணகுமார் என்பவர் அவரது மனைவி மகேஸ்வரி (வயது 47) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தாளியூரில் வசித்து வருகிறார்.
அவர்களது வீட்டில் ஓட்டுநராக 45 வயதான சுரேஷ் என்பவர் பணி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் புதன்கிழமை காலை வழக்கம் போல கவிசரவணகுமார் வெளியே சென்று உள்ளார். அவரது குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த மகேஷ்வரியை திடீரென கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு வடவள்ளி காவல் நிலையத்தில் சுரேஷ் சரணடைந்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, வடவள்ளி காவல்துறையினர் தடாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தடாகம் காவல்துறையினர் சம்பவம் இடமான தாளியூருக்கு சென்றனர். அங்கு வீட்டுக்குள் இருந்த மகேஸ்வரியின் உடலை காவல் துறையினர் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த தகவல் அறிந்து உறவினர்கள் மற்றும் மக்கள் வீட்டின் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து ஓட்டுநர் சுரேஷிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.