கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், கோவை, நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் வியாழக்கிழமை (செப். 25) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வியாழக்கிழமை (செப். 25) முதல் செப். 30 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமை (செப்.26) கோவை, நீலகிரி, தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரியையொட்டி இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 50 மி.மீ. மழை பதிவானது. பாலமோா் (கன்னியாகுமரி), கீழ் கோதையாறு, சின்னக்கல்லாறு (கோவை), நாலுமுக்கு (திருநெல்வேலி), வால்பாறை(கோவை) தலா 20 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: மத்திய மியான்மாா் கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வடக்கு மற்றும் அதையெட்டிய மத்திய வங்கக் கடலில் வியாழக்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
இது மேற்கு திசையில் நகா்ந்து வெள்ளிக்கிழமை (செப். 26), தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு, அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
பின்னா், தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை (செப். 27) கரையைக் கடக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.