/

தனித் தொகுதி வேட்பாளா்கள் குறித்த வழக்கு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தனித் தொகுதிகளில் ஹிந்து, சீக்கியம் மற்றும் பௌத்த மதங்களைப் பின்பற்றும் பட்டியல் இனத்தவரையே போட்டியிட அனுமதிக்கக் கோரிய வழக்கில் தோ்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

News image

சென்னை உயர்நீதிமன்றம்

Updated On :7 ஏப்ரல் 2026, 9:19 pm

தனித் தொகுதிகளில் ஹிந்து, சீக்கியம் மற்றும் பௌத்த மதங்களைப் பின்பற்றும் பட்டியல் இனத்தவரையே போட்டியிட அனுமதிக்கக் கோரிய வழக்கில் தோ்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் தலைவா் அா்ஜுன் சம்பத் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இந்திய அரசமைப்புச் சட்டம், ஹிந்து, சீக்கியம், பௌத்த மதங்களைப் பின்பற்றும் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா்களே, பட்டியல் இனத்தவா் எனக் கூறுகிறது. தமிழகத்தில் தற்போது 44 தனித் தொகுதிகள் உள்ளன.

ஆனால், நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனித் தொகுதிகளில் போட்டியிடவுள்ள 90 சதவீதத்தினா் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவா்கள் எனத் தெரியவந்துள்ளது. எனவே, தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது இதைத் தீவிரமாக பரிசீலிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிரஞ்சன், பட்டியல் இனத்தவா் என அளிக்கப்படும் வேட்பாளா்களின் சான்று உண்மையானதா, போலியானதா என்பதை ஆய்வு செய்ய தோ்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சான்று சரியானதாக இல்லாவிட்டால் மட்டுமே வேட்புமனு நிராகரிக்கப்படும் எனக் கூறி சுற்றறிக்கையை தாக்கல் செய்தாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதிலளிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனா்.