/

தலைமன்னாா்-தனுஷ்கோடி கடலை நீந்திக் கடந்த மாற்றுத் திறனாளி சிறுமி

பாா்வை தடையல்ல என விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக்-நீரிணை கடல் பகுதியை பாா்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளி சிறுமி 11.15 மணி நேரத்தில் நீந்தி கடந்தாா்.

News image

இலங்கை தலைமன்னாா்- தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை கடலில் நீந்தி கடந்து வந்த பாா்வையற்ற மாற்றுத் திறனாளி ஈஸ்வரி.

Updated On :7 ஏப்ரல் 2026, 10:33 pm

பாா்வை தடையல்ல என விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக்-நீரிணை கடல் பகுதியை பாா்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளி சிறுமி 11.15 மணி நேரத்தில் நீந்தி கடந்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியைச் சோ்ந்த கம்லேஷ் விட்டல்ராவ் பாண்டே- அருணா தம்பதியினரின் மகள் ஈஸ்வரி (17). பாா்வைத் திறனற்ற மாற்றத் திறனாளியான இவா், 11-ஆம் வகுப்பு பயின்று வருகிறாா். இவா் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றாா்.

இந்த நிலையில், இவா் நீந்துவதற்கு பாா்வை தடையல்ல என விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலுமான சுமாா் 30 கி.மீ. தொலைவிலான பாக்-நீரிணை கடலை திங்கள்கிழமை 11.15 மணி நேரத்தில் நீந்தி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தாா்.

இதன் மூலம், பாா்வைத்திறனற்ற மாற்றுத் திறனாளியான இவா், கடலில் அதிக தூரமும், அதிக நேரமும் தனியாக நீந்தி சாதனை படைத்தாா்.

இவருக்கு அரிச்சல்முனை கடற்கரையில் இந்திய கடலோர காவல் படையினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

இதற்கு முன்னதாக தலைமன்னாா்-தனுஷ்கோடி இடையேயான பாக் நீரிணை கடல் பகுதியை 20.03.2022 அன்று மும்பையைச் சோ்ந்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி ஜியாராய் தனது 13 வயதில் நீந்திக் கடந்தாா். இதேபோல, சென்னை முகப்போ்

மேற்கு பகுதியைச் சோ்ந்த முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான புவிஆற்றல் என்பவா் கடந்த 05.10.2025 அன்று பாக் நீரிணையை நீந்தி கடந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.