பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!பாலியல் தொல்லை வழக்கு! பி.ஆர். சுந்தரை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு! கருணாநிதி நினைவு நாள்! மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!அக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றிமாநில வருவாயை அதிகரிப்பது மாநில வருவாயை அதிகரிப்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்‘வெற்றித் தறி’ விற்பனை நிலையங்கள் இன்று தொடக்கம்: முதல்வா் விஜய் அறிவிப்பு 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புயுபிஐ பரிவா்த்தனைகளுக்கு கட்டணம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
/

அனைத்தும் தனியார்மயமா? தவெக அரசின் பயணப் பாதை ஆபத்தானது: அன்புமணி

சமூகநீதிக்கும், மனிதநேயத்துக்கும் எதிரான தவெக அரசின் இந்த அணுகுமுறை ஆபத்தானது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளது குறித்து...

News image

முதல்வர் விஜய் - அன்புமணி சந்திப்பு - கோப்புப்படம்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 11:47 am IST

தவெக அரசின் பல்வேறு சேவைகள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. சமூகநீதிக்கும், மனிதநேயத்துக்கும் எதிரான அரசின் இந்த அணுகுமுறை ஆபத்தானது ஆகும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இளைய தலைமுறையின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்த தவெகவின் ஆட்சியில் இளைஞர்களின் எதிர்காலம் சிறக்கும்; அரசு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு முற்றிலும் எதிராக அரசின் பல்வேறு சேவைகள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. சமூகநீதிக்கும், மனிதநேயத்துக்கும் எதிரான அரசின் இந்த அணுகுமுறை ஆபத்தானது ஆகும்.

தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தனியார் கூட்டாண்மையுடன் செயல்படுத்துவதற்கான 5 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பிலும் மின்சாரப் பேருந்துகளை தனியார் நிறுவனங்களின் மூலம் மொத்த செலவு ஒப்பந்த முறையில் இயக்குதல், மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த விடுதிகளை அமைத்தல், கோவை - அரியலூர் இடையே ரூ.4000 கோடி மதிப்பிலான மின்வழித்தடம் அமைக்கும் திட்டம், மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைத்தல், சென்னையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.15,000 கோடியில் ஒரு லட்சம் வீடுகளைக் கட்டுதல் ஆகியவை தான் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களாகும்.

கடந்த திமுக ஆட்சியிலேயே சென்னையில் தனியார் நிறுவனங்களின் மூலம் மின்சாரப் பேருந்துகளை இயக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டன. இந்த முறையில் ஏற்கனவே 625 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், நடப்பாண்டில் மேலும் 1000 பேருந்துகள் சேர்க்கப்படவுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் அனைத்துப் பேருந்துகளும் மின்மயமாக்கப்பட்டு தனியார் முறையில் இயக்கப்படும். இந்த முறையில் பேருந்துகளை தனியார் நிறுவனங்களே இயக்கும்; கி.மீக்கு ரூ.81 வீதம் ஒரு நாளைக்கு 400 கி.மீ இயக்கப்பட்டால் அதற்காக ரூ.32,400-ஐ போக்குவரத்துக் கழகங்களிடமிருந்து வசூலித்துக் கொள்ளும். ஓட்டுநர் - நடத்துநர் உள்ளிட்ட பணியாளர்களையும் தனியார் நிறுவனங்களே நியமித்துக் கொள்ளும் என்பதால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இனி ஓட்டுநர்கள், நடத்துனர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். அதனால் வேலைவாய்ப்பு குறையும்.

தனியார் பங்களிப்புடன் அரசு செயல்படுத்தவுள்ள மற்ற திட்டங்களிலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்படும். அதனால் அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு என்பது குதிரைக் கொம்பாகி விடும். ஏற்கனவே, போக்குவரத்து, மின்சாரம், உயர்கல்வி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறை பணி நியமனங்கள் நடைமுறைக்கு வந்து விட்டன. அதன்படி ஒவ்வொரு அலுவலகத்திற்கும் தேவையான பணியாளர்களை தனியார் மனிதவள நிறுவனங்களே அனுப்பும். அவர்களுக்கான ஊதியத்தை தனியார் மனிதவள நிறுவனத்திற்கு அரசு செலுத்தும். அந்த ஊதியத்தின் ஒரு பகுதியை மட்டும் பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் கொடுத்து விட்டு, மீதமுள்ள தொகையை சுருட்டிக் கொள்ளும். இந்த நடைமுறையில் பணியாளர்களின் உழைப்பும், ஊதியமும் சுரண்டப்படும். அவர்களுக்கு எந்த உரிமைகளும் தனியார் நிறுவனங்களால் வழங்கப்படாது.

இத்தகைய சூழலில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சேவைகளும் தனியார்மயமாக்கப்பட்டால், அத்துறைகளின் வேலைவாய்ப்புகள் அனைத்தும் சூறையாடப்படும். சேவை வழங்குவதற்கான பணியாளர்களை தனியார் நிறுவனங்களே நியமித்துக் கொள்ளும். இந்த நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப் படாது; ஊழியர்களுக்கு சட்டப்படியாக வழங்க வேண்டிய எந்த உரிமைகளும் வழங்கப்படாது. தனியார் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக பணியாளர்கள் மாற்றப்படுவார்கள். பல நூற்றாண்டுகளாக போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு விடும். தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவராகக் கொண்ட தவெக. இத்தகைய சுரண்டல் திட்டங்களை அனுமதிக்கக் கூடாது.

ஆனால், இனிவரும் காலங்களில் இத்தகைய சுரண்டல் திட்டங்கள் அதிகரிக்குமோ? என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற சமூகநீதியில் அக்கறை கொண்ட கட்சிகளின் ஐயமாக உள்ளது. அதற்கு காரணம் தமிழக அரசின் வருவாய் மேம்பாட்டுக் குழுவின் தலைவராக முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டெக்சிங் அலுவாலியா நியமிக்கப்பட்டிருப்பது தான். உலக வங்கியில் நீண்டகாலம் பணியாற்றிய மாண்டெக் சிங் அலுவாலியா அவர்கள், சீர்திருத்தம் என்ற பெயரில் உலக வங்கியின் விருப்பத்திற்கு ஏற்ற இத்தகைய திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்துவார் என்பது தான் எங்களின் அச்சத்திற்கு காரணம் ஆகும்.

தமிழ்நாட்டில் இன்று தவெக ஆட்சி நடைபெறுகிறது என்றால் அதற்கு முழுமுதல் காரணம் இளைஞர்கள் தான். அவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் இன்றைய முதல்வர் விஜய்க்கு உண்டு. அதற்காக இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை வழங்குதல், தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 80% இட ஒதுக்கீடு வழங்குதல் உள்ளிட்ட சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். அதற்கு மாறாக, வேலைவாய்ப்புகளையும், சமூகநீதியையும் சூறையாடும் தனியார்மயமாக்கல், வேலைவாய்ப்புகளை குத்தகைமயமாக்குதல் போன்ற அநீதியான நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் அது தமிழகத்திற்கும், இளைஞர்களுக்கும் செய்யும் துரோகம்.

எனவே, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன சேவைகளை தனியார்மயமாக்கும் அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இனியும் இத்தகைய திட்டங்கள் அனுமதிக்கப்படாது என்று தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளிப்பதுடன், அரசுத் துறைகளில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள 6 லட்சம் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்புவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Summary

I urge the government to immediately withdraw its decision to privatize government and public sector services...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.