
குதிரை பேர வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
குதிரை பேர வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை(ஆக 24) விசாரணைக்கு வருவது குறித்து...

உச்ச நீதிமன்றம் - Supreme Court
தவெக எம்.எல்.ஏ.-விடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை(ஆக 24) விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவு அளிக்கும்படியும், தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் ரூ. 35 கோடி லஞ்சமாக தருவதாகவும் தொலைபேசி மூலம் தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா, சென்னை காவல் துறை ஆணை ஏ.அமல்ராஜிடம் புகாா் அளித்தார்.
இதையடுத்து, திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த வழக்குத் தொடா்பாக துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படையினர் நடத்திய விசாரணையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் தூண்டதலின் பேரில் இளையராஜா எம்எல்ஏவிடம் பேசியது சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூ-டியூபரும், கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்தி வருபவருமான திருநாவுக்கரசு என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், திருச்சியைச் சோ்ந்த நரேஷ் உள்ளிட்ட 14 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் பெற்றனர்.
அதன்படி, செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் இருவரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலையில் கையொப்பம் இட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் மற்றும் முன்ஜாமின் வழங்கியதுடன், இந்த வழக்கை திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தவும் தடை விதித்தது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் வழக்குரைஞர் விருந்தா பண்டாரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய் மாலியா, வி.மோகனா அடங்கிய அமர்வு முன்பு நாளை(ஆக 14) விசாரணைக்கு வருகிறது.
Summary
Horse-trading case: Tamil Nadu government's appeal to be heard in the Supreme Court tomorrow!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






