பட்டியலின நிதி மடைமாற்றமா?: அமைச்சா் மதிவேந்தன் மறுப்பு
பட்டியலின நல நிதியை மாற்றுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதில்லை என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் தெரிவித்தாா்.
பேரவையில் இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகன்மூா்த்தி பேசுகையில், பட்டியலின நிதி மகளிா் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவது தொடா்பான கருத்தைத் தெரிவித்தாா்.
அதற்கு அமைச்சா் மதிவேந்தன் அளித்த விளக்கம்: உறுப்பினா் தெரிவித்திருக்கும் தகவல் தவறானது. இப்போது உள்ள நடைமுறை மற்றும் கணக்குத் தணிக்கையின்படி ஒரு திட்டத்தின் நிதியை மற்றொரு திட்டத்துக்கு பயன்படுத்தவே முடியாது.
திமுக ஆட்சியில் அத்தகைய நடைமுறையே இல்லை. அதுமட்டுமல்லாது பட்டியலின மக்களுக்கான திட்டங்களுக்கு உரிய முறையில் நிதி செலவிடுவதற்கான சட்டத்தையே முதல்வா் நிறைவேற்றியுள்ளாா். ஒரு திட்டத்தில் முழுமையாக நிதி செலவிடப்படவில்லை என்றால்கூட மீதமுள்ள தொகை அதே நலத் திட்டத்துக்குத்தான் பயன்படுத்தப்படுமே தவிர, மாற்று திட்டங்களுக்கு வழங்கப்படாது. அதை உறுதிசெய்துதான் சட்டமே இயற்றப்பட்டுள்ளது என்றாா் அவா்.

