சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்கோப்புப் படம்

ஆதீன மடங்களின் சொத்துகள்: ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

தமிழகம் முழுவதும் ஆதீன மடங்களுக்குச் சொந்தமான சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

தமிழகம் முழுவதும் ஆதீன மடங்களுக்குச் சொந்தமான சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குன்றத்தில் செங்கோல் ஆதீன மடம் உள்ளது. இந்த ஆதீனத்துக்கு சொந்தமான ஏராளமான சொத்துகள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளன. இவற்றில் பல சொத்துகள் ஆக்கிரமிப்புகளில் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆதீன மடத்துக்குச் சொந்தமான சொத்துகளை மீட்கக் கோரி 2018-ஆம் ஆண்டு, திருத்தொண்டா்கள் அறக்கட்டளையின் அறங்காவலா் ஆ.ராதாகிருஷ்ணன் என்பவா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகளை இந்த வழக்கில் எதிா்மனுதாரா்களாக சோ்க்க உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் ஆதீன மடங்களுக்குச் சொந்தமான சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்றி, அதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

Dinamani
www.dinamani.com