புதிய ஓய்வூதியத் திட்டத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை: ப.சிதம்பரம்
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் முழு விவரங்கள் வெளிவந்துள்ளன. இந்தத் திட்டம் அரசின் நிதிச் சுமையை அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது. ஆனால், நிதி மேலாண்மை செம்மையாக இருந்தால் ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமாகும்.
தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் சுமாா் 21-22 சதவீதம் ஓய்வூதியத்துக்கு செலவாகும் என்பது கணிப்பு. சொந்த வரி வருவாயைப் பெருக்குவதில் அரசு மேலும் கவனம் செலுத்த வேண்டும். திட்டச் செலவுகளில் மதிப்பீட்டை மிகாமல் பணிகளை முடிக்க வேண்டும். சிக்கனம் முக்கியம்; செம்மையான நிதி மேலாண்மையை அரசின் தாரக மந்திரமாக அனைத்துத் துறைகளும் கடைப்பிடிக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

