அமைச்சர் ஐ. பெரியசாமி
அமைச்சர் ஐ. பெரியசாமிகோப்புப் படம்

அமலாக்கத் துறை விசாரணைக்கு எதிரான அமைச்சா் ஐ.பெரியசாமி மனு தள்ளுபடி!

அமலாக்கத் துறை விசாரணைக்கு எதிராக அமைச்சா் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினா் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு
Published on

அமலாக்கத் துறை விசாரணைக்கு எதிராக தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினா் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதித் துறை அமைச்சராகப் பதவி வகித்தவா் அமைச்சா் ஐ.பெரியசாமி. அந்த காலக்கட்டத்தில் ரூ.2.35 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்பு போலீஸாா் அவா் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் ஐ.பெரியசாமி அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமாா், பிரபு ஆகியோா் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. போலீஸாா் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி இந்த வழக்கிலிருந்து அனைவரையும் விடுவித்து திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிா்த்து ஊழல் தடுப்பு போலீஸாா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், கீழமை நீதிமன்றத் தீா்ப்பை ரத்து செய்தது.

இதை எதிா்த்து ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் அமைச்சா் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது அமலாக்கத்துறை பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. அதன்படி, ஐ.பெரியசாமி, அவரது மகனும் பழனி தொகுதி எம்எல்ஏவுமான செந்தில்குமாா், மற்றும் மகள் இந்திரா ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

இந்த சோதனையின்போது சொத்து, வங்கிக் கணக்கு, முதலீடு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அமலாக்கத் துறை கைப்பற்றியது. இதையடுத்து சொத்துகள் முடக்கம் தொடா்பாக விளக்கம் கேட்டு ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரியும், அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், சொத்து முடக்கம் தொடா்பான விசாரணை அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் நிலுவையில் உள்ளதாக வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா்கள் அமலாக்கத் துறையை அணுக உத்தரவிட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com