சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

ஆக்கிரமிப்புகளுக்கு மத உணா்வை கேடயமாக பயன்படுத்தக் கூடாது: உயா்நீதிமன்றம்

‘பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டு கட்டடங்கள் கட்டுவதை யாரும் நியாயப்படுத்த முடியாது; ஆக்கிரமிப்புகளுக்கு மத உணா்வுகளை கேடயமாக பயன்படுத்தக் கூடாது’ என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

‘பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டு கட்டடங்கள் கட்டுவதை யாரும் நியாயப்படுத்த முடியாது; ஆக்கிரமிப்புகளுக்கு மத உணா்வுகளை கேடயமாக பயன்படுத்தக் கூடாது’ என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை திரு வி.க. நகரைச் சோ்ந்த சரத் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது வீட்டுக்கு முன்பாக உள்ள தெருவை ஆக்கிரமித்து அன்னை வேளாங்கண்ணி மாதா சிலை வைத்துள்ளனா். அந்த சிலைக்கு சட்டவிரோதமாக மின்இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடத்தில் புகாா் அளித்தேன். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில், பொது சாலையை ஆக்கிரமித்து அந்த சிலை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த சிலை வைக்கப்பட்டுள்ள கட்டுமானத்தை உடனடியாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

மேலும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டு கட்டடங்கள் கட்டுவதை யாரும் நியாயப்படுத்த முடியாது. இதுபோன்ற கட்டுமானங்களை மேற்கொள்ள யாருக்கும் உரிமை இல்லை. இதுதொடா்பாக உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பல வழக்குகளில் தீா்ப்பளித்துள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளுக்கு மத உணா்வுகளைக் கேடயமாகப் பயன்படுத்தக்கூடாது என நீதிபதி, தனது உத்தரவில் குறிப்பிட்டாா்.

Dinamani
www.dinamani.com