

பிராட்வே பேருந்து நிலையத்தில் ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டுமானப் பணிக்கு முதல்வர்
மு.க. ஸ்டாலின் இன்று(ஜன. 29) அடிக்கல் நாட்டினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியால் பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் தங்க சாலை பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் 1960-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1964-ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பிராட்வே பேருந்து நிலையமானது வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கான உபயோகத்திற்கு வந்தது. காலப்போக்கில் இப்பேருந்து நிலையத்தில் பல்வேறு சில்லறை கடைகள் அமைந்தன.
சென்னை மாநகரின் முக்கிய இடத்தில் இப்பேருந்து நிலையம் அமைந்துள்ளதாலும், மக்கள் தொகை பெருக்கத்தினாலும், இடநெருக்கடியால் வெளியூர் செல்லும் பேருந்துகள் 2002-ஆம் ஆண்டு நவம்பரில் கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர், பிராட்வே பேருந்து நிலையம் மாநகரப் பேருந்துகளுக்கான நிலையமாக மாற்றப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தில் சிறுகடைகள் அதிகமாக உள்ளதாலும், இடநெருக்கடியாலும், இப்பேருந்து நிலையத்தை நவீனப்படுத்த ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன.
ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம்
2022-23 ஆம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பிராட்வே பேருந்து நிலையத்தில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, ரூ. 822.70 கோடி மதிப்பீட்டில் பிராட்வே பேருந்து நிலையத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டடம் (Multi Modal Facility Complex)) கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, பிராட்வே பேருந்து நிலையத்தில் 822 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டடத்திற்கு முதல்வர் இன்றையநாள் அடிக்கல் நாட்டினார்.
ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டுமானத்தின் சிறப்பம்சங்கள்
இத்திட்டம் உயர் நீதிமன்றம் மெட்ரோ நிலையம், குறளகம் மற்றும் MRTS / புறநகர் ரயில் நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு மையமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக 9 தளங்களைக் கொண்ட Multi Modal Facility Complex கட்டடம் மற்றும் 10 தளங்களைக் கொண்ட குறளகம் கட்டடம் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளது. இவை 73 பேருந்து நிறுத்தங்களும், பயணிகள் கூடம், சில்லறை வணிக தளங்கள், அலுவலகப் பகுதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிட வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
MMFC திட்டமானது 26,240 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இடத்தில் மொத்தம் 1,36,580 சதுர மீட்டர் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மூன்று முக்கிய கட்டட பிரிவுகளைக் கொண்டுள்ளது.
பிரிவு 1 - இத்திட்டத்தின் மொத்த பரப்பளவு 1,08,290 சதுர மீட்டர் ஆகும். இதில் இரண்டு அடித்தளங்கள் ஒரு தரைத்தளம் மற்றும் எட்டு மேல் தளங்கள் கொண்டதாகும். பயணிகள் நேரடியாக உயர்நீதிமன்றம் மெட்ரோ நிலையம், NSC போஸ் ரோடு, Esplande ரோடு மற்றும் TNPSC ரோடு நுழைவு மற்றும் வெளியேற்று அமைப்பு வழியாக பேருந்து நிலையம் முதல் அடித்தளத்தில் அமைந்துள்ள பயணிகள் கூடத்தின் வழியாக தரை மற்றும் முதல் பேருந்து நிலையங்களுக்கு செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வடிவமைப்பின்படி பயணிகளுக்கும் பேருந்துகளுக்கும் ஏற்படும் இடையூறுகள் முற்றிலுமாக தவிர்க்கப்படும். இரண்டாவது அடித்தளம் கார் நிறுத்துமிடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு அடுக்கு கார் நிறுத்தும் அமைப்பு உள்ளது. தரை மற்றும் முதல் தளம் பேருந்து நிலையத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 73 பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பயணிகளுக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்படும். இரண்டாவது முதல் எட்டாவது தளங்கள் வரை அலுவலக பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
பிரிவு 2 - 22,794 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட குறளகம் கட்டடம் 2 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 9 மேல்தளங்களை கொண்ட கட்டடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் அடித்தளத்தில் இருந்து பயணிகளை MMFC கட்டடத்தின் பயணிகள் கூடத்திற்கும், கார் நிறுத்துமிடத்திற்கும் நேரடியாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அடித்தளத்தில்-இரண்டு அடுக்கு கார் நிறுத்துமிட வசதியும், தரைத்தளம் முதல் இரண்டாம் தளம் வரை சில்லறை வணிக தளங்களாகவும் திட்டமிடப்பட்டுள்ளது, மூன்றாம் தளம் முதல் ஒன்பதாம் தளம் வரை அலுவலகப் பயன்பாட்டிற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பிரிவு 3 - ஒரு அடித்தளம் மற்றும் ஒரு தரைத் தளத்தை கொண்ட துணை போக்குவரத்து நுழைவு கட்டடமும் இந்த திட்டத்தில் ஒரு பகுதியாகும். இது மெட்ரோ செயல்பாட்டு கட்டமைப்புகளை குறிப்பாக நுழைவு / வெளியேறும் கட்டமைப்புகளை உள்ளடக்கியது. இது பேருந்து முனையத்தின் இணைப்பு மண்டலத்தை NSC போஸ் சாலையில் அமைந்துள்ள பயணிகள் கூடத்துடன் இணைக்கிறது.
இந்த MMFC திட்டத்தில் 433 நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடங்கள் மற்றும் 1,174 இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள் போன்ற வசதிகளுடன், மின்சாரம், காற்றோட்டம், குளிர்சாதன வசதி, தீயணைப்பு அமைப்புகள், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மின்மாற்றி, ஒருங்கிணைந்த கட்டட மேலாண்மை அமைப்பு (IBMS), நவீன கழிப்பறைகள் மற்றும் வெளிப்புற நடை மேம்பாலங்கள் உள்ளிட்ட தேவையான உள்கட்டமைப்புகளும் இதில் அடங்கும்.
இந்த பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலைய வசதியானது, பொதுமக்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் வகையிலும், மேலும் எளிதான, சீரான, நவீன வசதிகளையும் அளிக்கும். சென்னை மாநகரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான அரசின் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களில் இத்திட்டமானது ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.