வீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதி

2026-ல் நடந்ததைப்போல 2031 ஆம் ஆண்டு மற்றொரு ஆட்சி மாற்றம் நடக்கும் என அண்ணாமலை கூறியது குறித்து...

News image

அண்ணாமலை - எக்ஸ்

Updated On :12 ஜூலை 2026, 7:15 pm IST

2026-ல் நடந்ததைப்போல 2031 ஆம் ஆண்டு மற்றொரு ஆட்சி மாற்றம் நடக்கும் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை இன்று (ஜூலை 12) தெரிவித்தார்.

மற்ற கட்சிகளை வசைபாடுவதற்கு அல்ல இந்த இயக்கம்; நாம் ஆரோக்கிய அரசியல் செய்வோம் என்றும் அற்ப அரசியல் செய்ய வேண்டாம் எனவும் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.

பாஜகவில் இருந்து விலகிய அக்கட்சியின் மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, வீ தி லீடர்ஸ் என்ற அமைப்பைத் தொடங்கினார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அண்ணாமலையின் இந்த அமைப்பின் முதல் மாநாடு இன்று (ஜூலை 12) நடைபெற்றது. போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இளைஞர்கள், பெண்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

மாநாட்டை தொடக்கி வைக்கும் விதமாக மேடையில் அண்ணாமலை குத்துவிளக்கு ஏற்றினார். இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றினர்.

முன்னதாக மேடைக்கு வந்த அண்ணாமலை, செருப்பைக் கழற்றிவிட்டு மேடையில் சாஷ்டாங்கமாக விழுந்து மக்களை வணங்கினார்.

போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். போதை விழிப்புணர்வு பாடலும் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேடையில் அண்ணாமலை பேசியதாவது:

’’வீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம். இன்னொரு கட்சியை திட்டுவதற்கு, குறை கூறுவதற்கு அல்ல இந்த மாநாடு.

2026-ல் நடந்ததைப்போல 2031 ஆம் ஆண்டு இன்னொரு ஆட்சி மாற்றம் நடக்கப்போகிறது. தலைவர்கள் தானாக வருவார்கள்.

மது எல்லா இடத்திலும் கலந்துவிட்டது. மறைந்து மறைந்து மது குடிக்கும் சூழல் மாறி, தைரியமாக மது குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாற்றத்தை நாம் தருவோம் என நம்பி தாய்மார்கள் நமது இயக்கத்தை நாடி வந்துள்ளனர். அவர்கள் நம்பிக்கையை வீணாக்காத வகையில் செயல்பட வேண்டும்.

இன்னும் சிறப்பான தலைவர்கள் அறிமுகம் செய்வோம். நல்ல மனிதர்களை கீழே இருந்து தூக்கி விடுவோம். அடுத்த 6 மாதங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற இலக்கு தெளிவாக உள்ளது. அதனை அடுத்தடுத்து செய்வோம்.

பாஜக உள்பட நிறைய கட்சியில் இருந்து மாநாட்டிற்கு வந்துள்ளனர். மக்களுக்கு நல்லது செய்யும் பார்வையில் செல்கிறேன். பழிச்சொல் சொல்லி ஒரு கட்சியில் இருந்து வெளியே வருபவன் அல்ல நான்.

இந்தியனா? தமிழனா?

நான் ஒரு தேசியவாதி. இந்தியனா? தமிழனா? என்ற கேள்விக்கு இந்தியன் என்பதில் ஒரு கர்வம் உண்டு. அதில் தமிழகம் முதன்மையாகக் கொண்டுவர வேண்டும் என்பது என் இலக்கு.

மதத்தை தூக்கிப்பிடித்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. மதத்தின் அடிப்படையில் நான் இந்து. ஆனால் அது வீட்டில் மட்டுமே.

பாஜகவின் பி-டீம் அண்ணாமலை என திமுகவுக்கு சந்தேகம். ஒருபோதும் அற்ப அரசியலில் ஈடுபடமாட்டேன்.

சாதி, மதத்தை வைத்து அரசியல் செய்தது போதும். மதத்தை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளியே வருவோம்.

ஓராண்டுக்கு தவெகவுக்கு கோரிக்கைகளை மட்டும் வைப்போம். நாம் ஆரோக்கிய அரசியல் செய்வோம். அற்ப அரசியல் செய்ய வேண்டாம். தவெகவில் செங்கோட்டையன் தவிர மற்ற அனைவருமே புதியவர்கள்’’ எனக் குறிப்பிட்டார்.

தவெக விமர்சிக்காதது ஏன்?

''தவெகவில் செங்கோட்டையன் தவிர மற்ற அனைவருமே புதியவர்கள். அனுபவமற்றவர்கள். அவர்கள் அனுபவமின்றி தடுமாறும்போது தூக்கிப்பிடிக்க வேண்டும். அற்ப அரசியலில் நாம் ஒருபோதும் ஈடுபடமாட்டோம்.

ஓராண்டுக்கு தவெகவுக்கு கோரிக்கைகளை மட்டும் வைப்போம். நாம் ஆரோக்கிய அரசியல் செய்வோம். அற்ப அரசியல் செய்ய வேண்டாம்.

தவெக அரசு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 80 ஆயிரம் கோடிக்கும் குறைவாக கடன் வாங்காது. இந்த ஆண்டு 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது.

தவெக அரசு முடியும்போது ரூ. 15 லட்சம் கோடி கடன் இருக்கும். தமிழ்நாட்டில் ஒரு குடும்ப அட்டை மீதான கடன் ரூ. 4.44 லட்சமாக உள்ளது.

மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சி என்பதே வீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கு.

என் மண், என் மக்கள் தொழிற்சங்க பேரவை தொடங்கியுள்ளோம். அதில் பலர் இணைய வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் தன்னெழுச்சியோடு வீ தி லீடர்ஸ் அமைப்பில் சேர்கின்றனர்.

பாஜகவில் இருந்து விலகிய பிறகு இஸட் பிளஸ் பாதுகாப்பு வேண்டாம் எனக் கூறிவிட்டேன். திரும்பப் பெற்றுக்கொள்ள கோரிக்கை வைத்துள்ளேன். நான் சுதந்திரமாக மக்களுடன் பேசிப் பழக வேண்டும் என நினைக்கிறேன்'' என அண்ணாமலை பேசினார்.

Summary

Change of government will take place in 2031 Pollachi We The Leaders K Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.