தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவராக வி.சிவா நியமனம்- தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவரான பூச்சி முருகன் கடந்த மே 5 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாமா ஏற்கப்பட்டுள்ள நிலையில், புதிய தலைவராக வி. சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் வடசென்னை வடக்கு மாவட்டச் செயலரான வி. சிவா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அரசாணையுடன் முதல்வர் ஜோசப் விஜய்யைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

தமிழ்நாடு அரசு அரசாணை.
முன்னதாக, தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. தேர்தலுக்கு முன்னதாக தவெக தலைவரான விஜய், விக்ரவாண்டி அல்லது விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடலாம் என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால், அவர் சென்னையின் பெரம்பூரிலும், திருச்சி கிழக்கிலும் போட்டியிடுவதாக வேட்பாளர்கள் அறிமுக விழாவில் அறிவித்தார். அப்போது, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று பணியாற்றிய வடசென்னை வடக்கு மாவட்டச் செயலரான வி. சிவாவை அழைத்து, “எனக்காக பெரம்பூர் தொகுதியை விட்டுக்கொடுத்தவர் இவர்” என்றும் விஜய் தெரிவித்திருந்தார். தவெக தலைவர் விஜய்க்காக, பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெறுவதாக சிவா பணியாற்றியிருந்தார்.
அதைத்தொடர்ந்து, பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட விஜய், 1,20,365 வாக்குகள் பெற்று எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்டி சேகரை 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். தனக்காக பெரம்பூர் தொகுதியை விட்டுக்கொடுத்த வி. சிவாவுக்காக தற்போது தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பதவியைக் கொடுத்து முதல்வர் விஜய் கௌரவித்துள்ளார்.
தவெக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முக்கிய நிர்வாகிகள் பலருக்கும் வாரியத் தலைவர் பதவிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மூத்த அரசியல்வாதி கு.ப. கிருஷ்ணனுக்கு தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் பதவியும், தவெக பேச்சாளர் லயோலா மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. அதேபோன்று, கரூரில் போட்டியிட்டு தோல்வியடைந்த மாவட்டச் செயலர் மதியழகனுக்கும் வாரியத் தலைவர் பதவி கொடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Summary
The Tamil Nadu government has issued an order appointing V. Siva as the Chairman of the Tamil Nadu Housing Board.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








