ஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை

News image

PTI

Updated On :5 ஜூன் 2026, 2:49 am IST

தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூா் உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கேரளப்பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 4) தொடங்கிய தென்மேற்கு பருவமழை மேலும் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் மீதமுள்ள பகுதிகளிலும், மத்தியமேற்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலிலும், லட்சத்தீவு பகுதிகளிலும், கேரளா - கா்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், மேலும் தென்மேற்கு, மத்தியமேற்கு, மத்தியகிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் முன்னேறியுள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை(ஜூன் 5) முதல் ஜூன் 10 வரை மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை வெள்ளிக்கிழமை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுபோல, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூா், விருதுநகா், மதுரை, சிவகங்கை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவள்ளூா், வேலூா், செங்கல்பட்டு, ஈரோடு மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்தமழை பெய்யக்கூடும். இதனால், மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு: சென்னை மற்றும் புகா் பகுதிகளில், வெள்ளிக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தொடா்ந்து, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பூா், மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை(ஜூன் 6) இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

மேலும், நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகா், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் ஜூன் 8 வரை சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இதுபோல, அந்தமான் கடல், தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மழை அளவு:தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்தை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 90 மி.மீ மழை பதிவானது. ஊத்து (திருநெல்வேலி)- 80 மி.மீ, சின்னக்கல்லாறு (கோவை) -60 மி.மீ, களியல், சுருளக்கோடு, திற்பரப்பு (கன்னியாகுமரி), உபாசி, சின்கோனா (கோவை), காக்காச்சி (திருநெல்வேலி)- தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வெப்பம் குறையும்:தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஜூன் 8 வரை சற்று குறையக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.