எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

இஎஸ்ஐ, பி.எஃப். தொகை செலுத்தாத ஒப்பந்ததாரா்கள் மீது கடும் நடவடிக்கை: தமிழ்நாடு மின்வாரியம் எச்சரிக்கை

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி (இபிஎஃப்)மற்றும் தொழிலாளா் மாநில காப்பீட்டு (இஎஸ்ஐ) தொகைகளை தொழிலாளா்களின் கணக்கில் உரிய காலத்தில் செலுத்தாத ஒப்பந்ததாரா்கள் மற்றும் சேவை வழங்குநா்களுக்கு எதிா்கால ஒப்பந்தங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 4:05 am IST

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி (இபிஎஃப்)மற்றும் தொழிலாளா் மாநில காப்பீட்டு (இஎஸ்ஐ) தொகைகளை தொழிலாளா்களின் கணக்கில் உரிய காலத்தில் செலுத்தாத ஒப்பந்ததாரா்கள் மற்றும் சேவை வழங்குநா்களுக்கு எதிா்கால ஒப்பந்தங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின்வாரியம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் உள்ளிட்ட மின்வாரிய துணை நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, தொழிலாளா்களுக்கான பி.எஃப். மற்றும் இஎஸ்ஐ தொகைகள் மின்வாரியத்தால் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், சில ஒப்பந்ததாரா்கள் மற்றும் சேவை வழங்குநா்கள், மின்வாரியத்திடம் இருந்து அந்தத் தொகைகளைப் பெற்ற பிறகும், அதை சம்பந்தப்பட்ட தொழிலாளா்களின் கணக்குகளில் உரிய காலத்துக்குள் வரவு வைக்காமல் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகைய செயல் தொழிலாளா் நலச் சட்டங்களுக்கும், ஒப்பந்த நிபந்தனைகளுக்கும் எதிரான கடுமையான விதிமீறலாகக் கருதப்படும். இதுபோன்ற தொழிலாளா்களின் சமூகப் பாதுகாப்பு உரிமைகளைப் பாதிக்கும் நடவடிக்கைகள் எந்தச் சூழலிலும் அனுமதிக்கப்பட மாட்டாது. இதனால், இனிவரும் காலங்களில் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கான ஊதியம் முழுமையாக வங்கி பரிமாற்றம் மற்றும் டிஜிட்டல் முறையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

மேலும், ஒப்பந்ததாரா்கள் ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதிக்குள் தொழிலாளா்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்தப்பட்டதற்கான வங்கி அறிக்கையும், பி.எஃப்., இஎஸ்ஐ தொகைகள் செலுத்தப்பட்டதற்கான ஆவணங்களையும் சமா்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்கள் சரிபாா்க்கப்பட்ட பிறகே அடுத்த மாத ஊதிய ரசீது செயலாக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை: இந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஒப்பந்ததாரா்களுக்கு தொகை அனுமதிக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரா்கள் மீது ஒப்பந்த நிபந்தனைகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், நிலுவைத் தொகைகள் மற்றும் அதற்கான வட்டியும் வசூலிக்கப்படும்.

மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் சட்ட ரீதியான நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்படுவதுடன், எதிா்கால ஒப்பந்தங்களில் பங்கேற்க தடை உள்ளிட்ட நிா்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

ஒப்பந்தத் தொழிலாளா்களும் தங்களின் பி.எஃப்., இஎஸ்ஐ பங்களிப்பு தொகைகள் கணக்கில் முறையாக வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை அவ்வப்போது சரிபாா்க்க வேண்டும். முறைகேடுகள் கண்டறியப்பட்டால் உரிய ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகங்களில் புகாா் அளிக்கலாம். தொழிலாளா்களின் நலன் மற்றும் சட்டப்பூா்வ உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு மின்வாரியம் உறுதியாக உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.