மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

பயிர்க்கடன் தள்ளுபடி, மின்வெட்டு... தவெக அரசு எதிராக அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தவெக அரசை வலியுறுத்தி ஜூன் 19-ல் அதிமுக போராட்டம் நடத்தும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதைப் பற்றி...

News image

முதல்வர் விஜய் | எடப்பாடி பழனிசாமி - (கோப்புப் படம்)

Updated On :12 ஜூன் 2026, 6:06 pm IST

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி சார்பில் அதிமுக தலைமை தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “நடந்து முடிந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் '5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்.

5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்' என்று வாக்குறுதி அளித்து விவசாயிகளை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், “கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் ரூ. 50,000-க்குள் கடன் பெற்றிருந்தால் மட்டுமே முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 1 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கியுள்ள விவசாயிகளுக்கு ரூ. 5,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்" என்றும் அறிவித்து விவசாயிகளை ஏமாற்றி உள்ளது தமிழக வெற்றிக் கழக அரசு.

மேலும், மக்கள் ஒவ்வொரு நாளும் வேதனை அடையும் வகையில், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை சரிசெய்வதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், முகம் சுளிக்கும் வகையில் அர்த்தமற்ற காரணங்களை த.வெ.க. அரசு கூறி வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

ஆட்சிக்கு வந்த குறுகிய நாள்களிலேயே, விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களை த.வெ.க. அரசு பல்வேறு வகைகளில் வஞ்சித்து, ஏமாற்றி வருவது கண்டனத்திற்குரியதாகும்.

இந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, அதிமுக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், ஜூன் 19 ஆம் தேதி காலை 10 மணியளவில், விழுப்புரம் நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம் மாவட்டச் செயலர் இரா. பசுபதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

விவசாயப் பெருங்குடி மக்கள் நலனையும், பொதுமக்கள் நலனையும் முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has announced that a massive protest demonstration will be held to urge the government to fulfill its election promises and to resolve the power outages on a war footing.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.