அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

விசாரணைக் கைதி மரணம்: முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

விசாரணைக் கைதி மரண விவகாரத்தில் தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி....

News image

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :18 ஜூலை 2026, 4:35 pm IST

நாகா்கோவில் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ' கடந்த திமுக ஆட்சியில் 'கோவில் காவலாளி அஜித்குமார்' முதல் சென்னை தலைமைச் செயலக காலனி போலீசாரால் 'விக்னேஷ்', தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று, பல சந்தர்ப்பங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் அடித்தும், என்கவுண்டர் என்ற பெயரிலும் கொல்லப்பட்டுள்ளனர். முக்கியமான குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருசில பெருந்தலைகளைக் காப்பாற்ற இதுபோன்ற நடவடிக்கைகள் அன்றைய அரசால் எடுக்கப்பட்டன என்று பொதுமக்களிடம் இருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

'மாற்றம் கொண்டு வருவோம்' என்று சொல்லி ஆட்சி அமைத்த இந்த த.வெ.க. அரசில், அடாவடித்தனங்கள் நிகழாது என்று மக்கள் நம்பினார்கள். 'மழைவிட்டும் தூவானம் விடவில்லை' என்பதுபோல், கொடுங்கோல் ஆட்சியாளர்களிடமிருந்து மக்கள் விடுபட்டிருந்தாலும், தவெக ஆட்சியாளர்களின் கையில் சிக்கித் தவிக்கிறார்கள். 'யானையின் பிடியிலிருந்து தப்பி, முதலையின் வாய்க்குள் விழுந்தது போல்' அப்பாவி மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்' எங்களின் போக்கை யாரும் மாற்ற முடியாது என்ற இருமாப்போடு ஒருசில காவல் துறையினர் செயல்படுவதும், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆட்சியாளர்கள் திணறுவதும், தொடர்கதையாகி வருகின்றன. சமீபத்தில் நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அவரை சிறைக் காவலர்கள் கொடுமைப்படுத்தி சாகடித்தார்கள் என்று அவரது குடும்பத்தினர், உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்த அரசின் அமைச்சர்களான சிலர் போய் அந்தக் குடும்பத்தினரை விலைபேசி, சமாதானப்படுத்த முயன்று தோற்றிருக்கிறார்கள். அமைச்சர்கள் தருவதாகச் சொன்ன நிவாரண நிதியையும், உதவியையும் பெற மறுத்ததாகச் செய்திகள் வருகின்றன. இதேபோல், சென்னை புழல் சிறையிலும் விசாரணைக் கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அவரது உறவினர்களும் நீதிகேட்டுப் போராடி வருகின்றனர். அவர்களுக்கும் இந்த ஆட்சியாளர்கள் விலைபேசி வருகிறார்கள்.

விலை மதிப்பற்ற உயிர்களுக்கு - உயிரே உன் விலை என்ன? என்று கேட்டு, பணத்தை வாரி இறைத்து, அப்பாவிகளின் வாயை அடைத்துவிடலாம் என்ற மமதை எண்ணம், ஆட்சிக்கு வந்த 60 நாட்களுக்குள்ளேயே ஒரு முதல்வருக்கு வந்துள்ளது என்பது மக்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தன்னைப் பார்க்க வந்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலை கொடுத்துவிட்டாலே, அந்தக் குடும்பங்கள் ஜென்ம சாபல்யம் அடைந்துவிடும் என்ற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் மிதக்கிறார்கள். லாக்அப் மரணங்களும், சிறைச்சாலை மரணங்களும், தேவையற்ற என்கவுண்டர்களும், குற்றச் செயலில் ஈடுபட்ட அதிகாரம் மிக்கவர்களைக் காக்க முயற்சிக்காமல், இதுபோன்ற செயல்களைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இவைகளையெல்லாம் விரைவில் தடுத்துவிடுவோம் என்று அமைச்சர்களை விட்டு சொல்ல வைப்பது, ‘குதிரைகள் ஓடிய பின்னால், லாயத்தை பூட்டுவதற்கு சமமான ஒன்றாகும்.

‘கோடிகளில் பணம் பெற்றோம், கொடுத்த கால்ஷீட்படி நடித்துக் கொடுத்தோர், படம் ஓடினாலும் - ஓடாவிட்டாலும் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று உச்சத்தைத் தொட்ட நடிகர் ஒருவர், உச்சாணிக் கொம்பில் அமர்ந்துகொண்டு கொக்கரிப்பது போல் அல்ல ஆட்சி நடத்தும் முறை' என்பதை, த.வெ.க. முதலமைச்சர் உணர வேண்டும்.

மாற்றத்தை வேண்டி தங்களது வீட்டில் உள்ள குழந்தைகளின் பேச்சைக் கேட்டு வாக்களித்த மக்களுக்கு, மாற்றத்தைத் தராவிட்டாலும், ஏமாற்றத்தைத் தராத வகையில் ஆட்சி சக்கரத்தை சுழற்ற வேண்டும் என்று பொய்க்கால் குதிரை அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has condemned the TVK government, stating that much like the DMK, it puts a price tag on invaluable human lives.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.