பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திண்டிவனத்தில் அவர் அளித்த பேட்டியில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அனைவரும் பார்த்து கொண்டிருக்கிறோம். குடும்பத்தார் மற்றும் பணம் கொடுப்பவர்களின் பேச்சை மட்டும் கேட்கிறார் இபிஎஸ். உங்கள் மகனை அரசியலுக்கு கொண்டு வர வேண்டாமென சொல்லவில்லை. ஆனால் ஏன் நாடகம் நடத்துகிறார். அதிமுக ஒரு குடும்பத்தின் பிடிக்குள் சென்றுக்கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.
தொடர்ச்சியாக அனைத்து தேர்தல்களிலும் தோல்வி. அதேபோல் வாக்கு சதவிகிதமும் சரிகிறது. எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் இன்றைக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. திமுகவுடன் இணைந்து முதல்வர் பதவியில் அமர நினைத்தார் எடப்பாடி பழனிசாமி. கட்சியில் இருந்து கொத்துக் கொத்தாக வெளியேறுகின்றனர். சீட்டுக்கட்டு போல் கட்சி சரிகிறது. இன்னும் தனது தவறை உணராமல் மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. 47 தொகுதிகளில், 31-ல் வெற்றி பெற்றோம் என்றால் அது பாமக போட்ட பிச்சை.
பாமக கூட்டணியில் இல்லை என்றால் வட மாவட்டங்களில் அதிமுகவால் வென்றிருக்க முடியாது. பாமக இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமியே தட்டுத் தடுமாறிதான் ஜெயித்திருப்பார். அதிமுக செயற்குழு கூட்டத்தை கூட்ட இபிஎஸ்ஸுக்கு தயக்கம் ஏன். ஆண்டுக்கு 2 முறை கூட்ட வேண்டிய செயற்குழு கூட்டத்தையாவது கூட்ட வேண்டும். 8 ஆண்டுகளாக இபிஎஸ் சொன்ன அனைத்து கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டுள்ளோம். இபிஎஸ் பேச்சை கேட்ட பாவத்திற்குதான் தற்போது அனுபவிக்கிறோம். கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற சூழலை உருவாக்குகிறார்கள். எங்களின் ஒரே கோரிக்கை அதிமுக காப்பாற்றப்பட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
Summary
Former AIADMK Minister C.V. Shanmugam has stated that the AIADMK won in 31 constituencies solely because of the PMK.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









