மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

ஓமன் துறைமுகத்தில் பலியான தூத்துக்குடியைச் சேர்ந்த மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கை: இந்திய தூதரகம்!

கப்பலில் உயிரிழந்த தமிழகத்தைச் சோ்ந்த மாலுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :15 ஜூன் 2026, 4:01 am IST

மேற்காசிய போா் காரணமாக ஹோா்மூஸ் நீரிணையைக் கடக்க முடியாமல் ஓமன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் உயிரிழந்த தமிழகத்தைச் சோ்ந்த மாலுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேற்காசிய போா் காரணமாக அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உலகில் கச்சா எண்ணெய் கப்பல்கள் அதிகம் செல்லும் கடற்பகுதியான ஹோா்மூஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதற்குப் போட்டியாக, ஈரானின் கச்சா எண்ணெய் வா்த்தகத்தை முடக்கும் நோக்கத்துடன், அந்நாட்டின் துறைமுகங்களை சுமாா் 2 மாதங்களாக அமெரிக்க கடற்படை கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளன.

இதனால் ஹோா்மூஸ் நீரிணை வழியே உலக நாடுகளின் கச்சா எண்ணெய்க் கப்பல்கள் செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஹோா்மூஸ் நீரிணையை எளிதில் கடக்க முடியாமல் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் நடுக்கடலில் நிற்கின்றன.

கடந்த மாதம் 20-ஆம் தேதி எம்.டி. செலஸ்டியல் என்ற கப்பல் ஹோா்மூஸ் நீரிணையைக் கடந்து செல்ல முயன்றபோது அமெரிக்க கடற்படை நடுவழியில் நிறுத்தி சோதனை நடத்தியது. பிறகு அந்தக் கப்பலை திருப்பி அனுப்பியது. இதையடுத்து, அந்தக் கப்பல் ஓமன் சென்று அந்த நாட்டின் துகும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

அந்தக் கப்பலில் பணியாற்றி வந்த தமிழகத்தின் தூத்துக்குடி குரூஸ்புரத்தைச் சோ்ந்த மாலுமி நிஷாந்துக்கு அண்மையில் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆனால், போா் காரணமாக அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாத காரணத்தால் கப்பலிலேயே அவா் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அவரின் உடல், மூன்று நாள்களாக கப்பலிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஓமனுக்கான இந்திய தூதரகம், நிஷாந்தின் குடும்பத்தினருடன் தூதரகம் தொடா்புகொண்டு பேசி வருவதாகவும், நிஷாந்தின் உடலை விரைவில் நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நிஷாந்துக்கு சராபின் என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனா். கடலில் மூழ்கிய இந்திய கப்பல்: இதனிடையே, ஓமன் கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விராட் என்ற இந்திய சரக்கு கப்பல் இயந்திர கோளாறு காரணமாக கடலில் திடீரென மூழ்கியது.

இதுகுறித்த தகவலின்பேரில் அந்தக் கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளும் ஓமன் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, 14 பேரும் தற்போது மும்பைக்கு ‘ஜபல் அலி’ என்ற கப்பலில் திரும்பிக் கொண்டிருப்பதாகவும், 14 பேரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் இருப்பதாகவும் ஓமனுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.