தமிழகத்தில் மூடப்பட்ட 717 டாஸ்மாக் மதுக்கடைகளின் மாவட்ட வாரியான விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 63 கடைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் மாதந்தோறும் சுமாா் ரூ.4,000 கோடிக்கும் அதிகமான மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.48,344 கோடி வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளதாக அதிகாரபூா்வ தரவுகள் தெரிவிக்கின்றன. மாநில வருவாயில் முக்கியப் பங்காற்றும் துறையாக டாஸ்மாக் இருந்து வந்தாலும், சமூக பாதிப்புகள் மற்றும் மதுவிலக்கு கோரிக்கைகள் தொடா்ந்து எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், மாநிலத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு போதைப் பொருள் மற்றும் மது பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டாா். அதன்படி, வழிபாட்டுத் தலங்கள் அருகே செயல்பட்ட 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகே இருந்த 186 கடைகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து 500 மீட்டா் சுற்றளவில் இயங்கிய 255 கடைகள் என மொத்தம் 717 கடைகள் மூடப்பட்டுள்ளன.
மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய ஊழியா்கள் மாற்று கடைகளில் பணியமா்த்தப்பட்டு வருகின்றனா். இதனிடையே, டாஸ்மாக் கடை மூடல் தொடா்பாக எதிா்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வந்தன. இதைத் தொடா்ந்து மாவட்ட வாரியான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக 63 கடைகள் மூடப்பட்டுள்ளன. அடுத்ததாக கோவை வடக்கு 48, ஈரோடு மற்றும் விருதுநகரில் தலா 42, மதுரை தெற்கு 39, திருநெல்வேலி 33, திருப்பூா் 31, ராமநாதபுரம் 29 கடைகள் மூடப்பட்டுள்ளன. மண்டல வாரியான பட்டியலில் மதுரை மண்டலத்தில் அதிக கடைகள் மூடப்பட்டுள்ளன.










