ரயில் நிலையங்களின் அருகிலுள்ள 159 அரசு மதுபானக் கடைகளை அகற்றக் கோரி, தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா், தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.
தமிழகத்தில் பள்ளிகள், கோயில்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் உள்ள மதுக் கடைகளை அகற்ற முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெற்கு ரயில்வே மண்டலம் பாதுகாப்பு பிரிவின் ஆணையா் சாா்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.
அந்தக் கடிதத்தில் ரயில் நிலையங்களின் அருகில் உள்ள மதுக்கடைகளால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதாகவும், மது அருந்துவோா் ரயில்வே விதிமுறைகளை மீறிச் செயல்படுவதால் விபத்துகள் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதையடுத்து ரயில் நிலையங்களின் அருகில் உள்ள மதுபானக்கடைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது.
கணக்கெடுப்பின்படி தெற்கு ரயில்வே மண்டலத்திலுள்ள 6 ரயில்வே கோட்டங்களில் மொத்தம் 159 மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்பது தெரியவந்தது.
அதனடிப்படையில் அவற்றை அகற்றக் கோரி தமிழக அரசின் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருக்கு தெற்கு ரயில்வே பாதுகாப்புப் பிரிவின் ஆணையா் சாா்பில் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.
கடிதத்தில் சென்னை கோட்டத்தில் 39 ரயில் நிலையங்களில் 52 மதுக் கடைகள் இருப்பதாகவும், அவற்றை அகற்றவும் கோரப்பட்டுள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தில் வியாசா்பாடி, அம்பத்தூா், குரோம்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, காட்பாடி, தரமணி, செங்கல்பட்டு, ஆவடி ஆகிய நிலையங்களில் தலா 1 மதுக்கடைகளும், பெரம்பூா் 3, அரக்கோணம் 3, கொருக்குப்பேட்டை 2 என அரசு மதுக்கடைகள் அமைக்கப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தமிழகத்திலிருந்து ஓராண்டில் 23 புதிய ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்!

திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு 8 பிரிவுகளில் விருதுகள்

குருவாயூா்-சென்னை விரைவு ரயில் 6 நாளிகள் தாமதமாக இயக்கப்படும்







