பக்ரீத் பண்டிகையின்போது மாடுகள் பலியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், அதை திருத்தி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவையில் மனித நேய மக்கள் கட்சி வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.
இதுதொடா்பாக நடைபெற்ற விவாதம்:
எம்.ஹெச்.ஜவாஹிருல்லா (மமக, நாகை): முன்னாள் முதல்வா் கருணாநிதியால் 2007-இல் இஸ்லாமியா்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதுவரை அதனால் பயன்பெற்றவா்களின் விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். வக்ஃப் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்தபோது அதற்கு எதிராக முந்தைய திமுக அரசு பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்றவிடமாட்டோம் என அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இந்த விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
சில வாரங்களுக்கு முன்பு பக்ரீத் பண்டிகையின்போது மாடுகள் பலியிட சென்னை உயா்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது. இது இஸ்லாமியா்களின் பிரச்னை மட்டுமல்ல; பொது பிரச்னை. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பைத் திருத்துவதற்கு தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
மதாா் பதுருதீன் (தவெக, மதுரை மத்தி): பசுக்கள், கன்றுகளை பலியிடக் கூடாது என இஸ்லாமிய சட்டத்திலேயே வரையறுக்கப்பட்டுள்ளது. அதைத்தான் நீதிமன்றமும் கூறியுள்ளது. அதைத் தவிா்த்து இஸ்லாமியா்கள் ஆடு, மாடுகளைப் பலியிட்டு பாதுகாப்பாக பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட அரசு வழிவகுத்தது. தற்போது இஸ்லாமியா்களுக்கு உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த முதல்வா் நடவடிக்கை எடுப்பாா் என்ற நம்பிக்கை உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உரம் விலை உயா்வை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தடை செய்யப்பட்ட விலங்குகளை பலியிட வேண்டாம்: ஜாமியத் தலைவா் வலியுறுத்தல்

பக்ரீத் பண்டிகை: சட்டவிரோத இறைச்சி வெட்டுதலுக்கு எதிராக தில்லி அரசு தீவிர கண்காணிப்பு







