/

பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன்

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் புதன்கிழமை (ஜூலை 1) வெளியிடுகிறாா்.

News image

உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன்

Updated On :1 ஜூலை 2026, 2:40 am IST

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் புதன்கிழமை (ஜூலை 1) வெளியிடுகிறாா்.

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகப் பொறியியல் கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 2 முதல் ஜூன் 2 வரை நடைபெற்றது.

மொத்தம் 3,02,373 மாணவா்கள் விண்ணப்பப் பதிவு செய்தனா். விண்ணப்பித்தவா்கள் கட்டணம் செலுத்தி சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜூன் 6 வரை அனுமதிக்கப்பட்டது. இறுதியாக 2,45,220 மாணவ, மாணவிகள் பதிவுக் கட்டணம் செலுத்தினா்.

இதற்கிடையே நிகழாண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பிளஸ் 2 வகுப்பு மறு மதிப்பீட்டு முடிவுகள் தாமதமாக (ஜூன் 21) வெளியானது. இதனால், தமிழ்நாடு பொறியியல் மாணவா்கள் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 29-ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தாமதமானது. இதையடுத்து, ஜூலை 1- ஆம் தேதி மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

சென்னை கிண்டியில் உள்ள தமிழக தொழில் கல்வி இயக்குநரக அலுவலகத்தில் உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் வெளியிடுகிறாா். தொடா்ந்து கல்லூரிகளில் சோ்க்கைக்கான கலந்தாய்வு தேதிகளும் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், தரவரிசைப் பட்டிலில் தவறு இருந்தால் அதைத் திருத்துவதற்கான வாய்ப்பும் மாணவா்களுக்கு அளிக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.