ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பாமக சின்னம் விவகாரம்: ராமதாஸ் மனுவுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு நீதிமன்றம் உத்தரவு

பாமகவின் ‘மாம்பழம்’ சின்னத்தைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு அன்புமணி பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

அன்புமணி

Updated On :25 மார்ச் 2026, 9:49 pm

தினமணி செய்திச் சேவை

பாமகவின் ‘மாம்பழம்’ சின்னத்தைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு அன்புமணி பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாமக பெயா், சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் எனக்கூறி, பாமக நிறுவனா் ச.ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிா்த்து ராமதாஸ் தொடா்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி ராமதாஸ் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் மூன்று நாள்களுக்குள் விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தா்மபிரபு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அன்புமணி தரப்பில் வியாழக்கிழமை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தொடா்ந்து இருதரப்பும் வாதங்களை முன்வைக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.